தேசிய சினிமா தினத்தை முன்னிட்டு 75 ரூபாய்க்குத் திரைப்படம் பார்க்கும் சலுகையை வேறு தேதிக்கு மாற்றியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
டிக்கெட் விலை உயர்வு காரணமாகத் திரையரங்குகளுக்குச் செல்வதற்கு நடுத்தர மற்றும் ஏழை குடும்பத்தினர் தயக்கம் காட்டி வருகின்றனர். டிக்கெட் விலை மட்டுமில்லாது பார்க்கிங் கட்டணம், கேன்டின் பில் என எகிறும் பட்ஜெட் படம் பார்க்க வேண்டும் என்ற மனநிலையை மங்க வைத்துவிடுகிறது. இதற்காக குடும்பமாகத் திரையரங்கம் செல்ல மக்கள் தயங்குகிறார்கள். இந்த சூழலில் செப்டம்பர் 16-ம் தேதி மட்டும் டிக்கெட் விலை 75 ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது. அன்று தேசிய சினிமா தினம் என்பதால் நாடு முழுவதும் உள்ள மல்டி பிளக்ஸ் திரையரங்குகளில் 4,000 திரைகளுக்கு டிக்கெட் கட்டணமாக 75 ரூபாய் மட்டும் வசூலிக்கப்படும் என ஏற்கெனவே அறிவித்திருந்தார்கள்.
ஐநாக்ஸ், பிவிஆர், சிலிபோனிஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் இந்த முன்னெடுப்பில் பங்கேற்றுள்ளன. ஆனால் சாதாரண திரையரங்க உரிமையாளர்கள் இந்த சலுகையை வழங்க ஒப்புக்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் செப்டம்பர் 16-ம் தேதி அறிவிக்கப்பட்ட டிக்கெட் விலை குறைப்பு சலுகையை செப்டம்பர் 23-ம் தேதிக்கு மாற்றம் செய்வதாக மல்டிபிளக்ஸ் திரையரங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது. புதிய படங்கள் வருகையையொட்டி இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.