உயிரியல் பூங்காவில் உள்ள வங்காளப் புலிக்கு பிரபல ஹீரோவின் பெயரை பூங்கா நிர்வாகம் சூட்டியுள்ளது.
பிரபல தெலுங்கு ஹீரோ பிரபாஸ். ‘பாகுபலி’ படம் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் இவர். அதன் பிறகு இவர் நடிக்கும் படங்கள் பான் இந்தியா முறையில் உருவாகி வருகிறது. இவர் நடித்த 'சாஹோ', 'ராதே ஷ்யாம்' படங்கள் இந்தியா முழுவதும் வெளியானாலும் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.
'சாஹோ' படப்பிடிப்பின் போது பிரபாஸுக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. அறுவை சிகிச்சை செய்து கொள்ள அப்போது கூறப்பட்டது. ஆனால், அடுத்தடுத்து படங்களில் நடிக்க ஒப்பந்த மாகி இருந்ததால் செய்ய முடியவில்லை. இந்நிலையில், மருத்துவர்கள் அறிவுரைப்படி கடந்த மாதம் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். இப்போது அவர் ஓய்வெடுத்து வருகிறார்.
இதனால் அவர் நடிக்கும் ஆதிபுருஷ், சலார், நாக் அஸ்வின் இயக்கும் படங்களின் ஷூட்டிங் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹைதராபாத் நேரு உயிரியல் பூங்காவில் உள்ள வங்காளப் புலிக்கு நடிகர் பிரபாஸின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. உயிரியல் பூங்கா அதிகாரிகள் இதைத் தெரிவித்துள்ளனர்.