தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்துக்கு 2 வருடத்துக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். தற்போதைய தலைவர் ஆர்.கே.செல்வமணியின் பதவிகாலம் முடிவடைந்ததால், புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடந்தது.
சென்னை கே.கே.நகர் ராஜமன்னார் சாலையில் உள்ள தாய் சத்யா பள்ளி வளாகத்தில் நடந்த இந்த தேர்தலில், தலைவர் பதவிக்கு கே.பாக்யராஜ், ஆர்.கே.செல்வமணி தனித்தனி அணியாகப் போட்டியிட்டனர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 4 மணி வரை நடைபெற்றது. வழக்கறிஞர் ச.செந்தில்நாதன் தேர்தல் அதிகாரியாக செயல்பட்டார்.
பின்னர் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் அனைத்து சுற்றுகளிலும் முன்னணியில் இருந்த இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வெற்றி பெற்றார். அவர் 955 வாக்குகளும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட இயக்குநர் கே.பாக்யராஜ் 566 வாக்குகளும் பெற்றனர். 389 வாக்குகள் கூடுதலாக பெற்று ஆர்.கே.செல்வமணி வெற்றி பெற்றார். இயக்குநர்கள் மாதேஷ், எழில் ஆகியோர் துணைத் தலைவர்களாகப் போட்டியின்றி ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டனர்.
செயலாளர், பொருளாளர், இணைச் செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.