`இந்த ரோல்களில் கவனம் செலுத்துங்கள்'- நடிகர் பிரஷாந்த்துக்கு ஆர்.கே.செல்வமணி டிப்ஸ்

`இந்த ரோல்களில் கவனம் செலுத்துங்கள்'- நடிகர் பிரஷாந்த்துக்கு ஆர்.கே.செல்வமணி டிப்ஸ்

"பிரஷாந்த் அறிவுக்கும் திறமைக்கும் அன்புக்கும் தொழில்நுட்ப ஆர்வத்திற்கும் அவர் தனக்கான சரியான உயரத்தை அடையவில்லை என்றுதான் சொல்வேன். அவர் இந்த கால மாற்றத்திற்கேற்ப ஆன்டி ஹீரோவாக, நெகட்டிவ் ரோல்களில் கவனம் செலுத்தினால் பெரிய உயரத்தை அடையலாம்" என்று இயக்குநர் ஆர்.கே.செல்வமணி கூறினார்.

ஆண்டுதோறும் தனது பிறந்த நாளை ஏதாவது ஓர் அடையாளத்துடன் கொண்டாடுவது பிரஷாந்தின் வழக்கம். இந்த ஆண்டு சென்னை தி.நகர் பிரஷாந்த் கோல்டு டவரில் நடந்த விழாவில் பத்திரிகையாளர்கள் மத்தியில் கேக் வெட்டிக் கொண்டாடினார். இந்த விழாவில் பெப்ஸியின் தலைவரும் அண்மையில் தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவர் ஆர்.கே.செல்வமணி, இயக்குநர் ஏ.வெங்கடேஷ், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இசைக்கலைஞர்கள் சங்கத்தின் தலைவரும் இசையமைப்பாளருமான தினா ஆகியோர் கலந்து கொண்டு பிரஷாந்தை வாழ்த்தினர்.

இவ்விழாவில் பிரஷாந்தின் தந்தையும் இயக்குநரும் நடிகருமான தியாகராஜன் பேசும்போது, "பிரஷாந்த் நடித்து அடுத்தடுத்து படங்கள் வர உள்ளன. இப்போது தயாராகிக் கொண்டிருக்கும் 'அந்தகன்' திரைப்படம் பிரஷாந்த்துக்கு மறக்க முடியாத படமாக இருக்கும். இந்தப் படம் இந்தியில் வெளியாகி பெரிய வெற்றி பெற்றது. தெலுங்கு, மலையாளத்திலும் பெரிய வெற்றி பெற்றது. சீனாவில் 4000 திரையரங்குகளில் வெளியாகி பெரிய வசூல் செய்த படம் அது. தமிழிலும் பிரம்மாண்டமாகவும் பெரும் பொருட்செலவிலும் எடுக்கப்பட்டு வருகிறது. பிரஷாந்துக்கு அடுத்தடுத்து அழுத்தமான நல்ல கதைகளையும் நல்ல இயக்குநர்களையும் தேடிக்கொண்டிருக்கிறோம். அப்படி நல்ல படங்கள் அமையும் என்று நம்புகிறோம்" என்றார்.

இயக்குநர் ஆர்.கே.செல்வமணி பேசும்போது, "தியாகராஜன் சாருக்கும் எனக்கும் உள்ள நட்பு முப்பதாண்டுகளாக அதே அளவு நீடிக்கிறது. அன்று பார்த்தது முதல் அப்படியே இருக்கிறார். எனது முதல் இரண்டு படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு ஒரு காதல் கதை எடுப்பதாக முடிவு செய்தபோது பலரையும் நடிக்க வைத்தோம். நான் திருப்தியடையவில்லை. அப்போதுதான் பிரஷாந்த் அனுப்பிய புத்தாண்டு வாழ்த்தையும் அதிலிருந்த அவரது படத்தையும் பார்த்து அவரை எனக்குப் பிடித்துவிட்டது. நடிக்க வைத்தேன். அப்போது பலரும் அவரது தந்தை பற்றி என் காதுபடப் பேசினார்கள். சரியாக வராது என்றார்கள். அவர் என் படத்தில் நடிக்க வந்த பிறகும் கூட நம்பாத நிலை இருந்தது. முன்பணமும் அவர் வாங்கவில்லை.

அதனால் பலரும் சந்தேகிக்கிறார்கள் என்று அவருக்கு நான் 25 ஆயிரம் ரூபாய் வலுக்கட்டாயமாக முன்பணமாகக் கொடுத்தேன்.அவருக்கு கொடுத்த சம்பளமே அவ்வளவுதான். அவர் நடித்துக் கொடுத்து ஒத்துழைத்தார். படப்பிடிப்பின்போது நான் ரோஜாவை மட்டுமல்ல பிரஷாந்தையும் காதலித்தேன். அந்தளவுக்கு அவரை எனக்குப் பிடித்தது. அவரது அறிவுக்கும் திறமைக்கும் அன்புக்கும் தொழில்நுட்ப ஆர்வத்திற்கும் அவர் தனக்கான சரியான உயரத்தை அடையவில்லை என்றுதான் நான் சொல்வேன். அவர் இந்த கால மாற்றத்திற்கேற்ப ஆன்டி ஹீரோவாக, நெகட்டிவ் ரோல்களில் கவனம் செலுத்தினால் பெரிய உயரத்தை அடையலாம். இப்போதெல்லாம் மக்கள் நடிகர்களை நடிகர்கள் என்றுதான் பார்க்கிறார்கள். ஹீரோ, வில்லன் என்று யாரும் பார்ப்பதில்லை. எனவே அவர் பல்வேறு திறமைகளை நடிப்பில் காட்டிக் கொள்ள வாய்ப்புள்ள நெகடிவ் ரோல்களில் நடித்தால் பெரிய உயரம் தொடுவார்" என்று கூறி வாழ்த்தினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in