முதலில் விருந்து, அடுத்து..!- `ஆர்ஆர்ஆர்’ டீமை ஆச்சரியப்படுத்திய ராம் சரண்
’ஆர்ஆர்ஆர்’ படத்தில் பணியாற்றிய 35 பேருக்கு தலா 10 கிராம் தங்க நாணயம் கொடுத்து மகிழ்ந்துள்ளார்.
ராஜமவுலி இயக்கத்தில் கடந்த மாதம் 25-ம் தேதி வெளியான படம், ’ஆர்ஆர்ஆர்’. ஜூனியர் என்.டி.ஆர்., ராம் சரண், அஜய்தேவ்கன், ஆலியா பட் உட்பட பலர் நடித்த இந்த பான் இந்தியா படம் வரவேற்பைப் பெற்றுள்ளது. தானய்யா தயாரித்த இந்தப் படத்துக்கு கே.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். மரகதமணி இசை அமைத்துள்ளார்.
படம் வெளியான முதல் நாளிலேயே ரூ.100 கோடி வசூலை இந்தப் படம் கடந்தது. மூன்றே நாட்களில் ரூ.500 கோடி வசூலை கடந்து சாதனை படைத்தது. அடுத்த சாதனையாக பாகுபலி முதல் பாகத்தின் வசூலைக் கடந்தது. இந்நிலையில், இந்தப் படம் வட இந்தியாவில் தொடர்ந்து வசூல் ஈட்டி வருகிறது. படம் வெளியாகி இரண்டு வாரம் ஆகிவிட்டாலும் இதன் வசூல் சரியவில்லை.
இப்போது ஆயிரம் கோடி வசூலை நெருங்கிக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படம் வசூலில் இன்னும் சாதனை படைக்கும் என்று பாக்ஸ் ஆபிஸ் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், இந்தப் படத்தில் பணியாற்றிய சுமார் 35 பேரை தனது ஹைதராபாத் வீட்டுக்கு அழைத்தார், நடிகர் ராம் சரண்.
அவர்களுடன் காலை உண்ட ராம் சரண், அவர்கள் அனைவருக்கும் ஸ்வீட் பாக்ஸ்களை கொடுத்தார். பின்னர் ஒரு ஸ்பெஷல் பரிசு ஒன்றை கொடுத்துள்ளார். அதில் 10 கிராம் மதிப்புள்ள தங்கக் காயின் இருந்துள்ளது. அதில் ஒரு பக்கம் ஆர்ஆர்ஆர் என்ற லோகோவும் மறுபக்கம் ராம் சரண் பெயரும் பொறிக்கப்பட்டுள்ளது. இதற்காக அவர் ரூ.18 லட்சம் செலவழித்துள்ளதாகக் கூறப்படுகிறது.