ஷங்கர் இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் இருந்து கசிந்த, ராம் சரணின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
ஷங்கர் இயக்கும் படத்தில், ராம் சரண் நாயகனாக நடித்து வருகிறார். இந்தப் படத்துக்கு தற்காலிகமாக, RC15 என டைட்டில் வைத்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில் இந்தி நடிகை கியாரா அத்வானி நாயகியாக நடிக்கிறார். அஞ்சலி, ஜெயராம், சுனில், ஸ்ரீகாந்த், நவீன் சந்திரா உட்பட பலர் நடிக்கின்றனர். எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிப்பதாகக் கூறப்படுகிறது.
இதன் கதையை கார்த்திக் சுப்புராஜ் எழுதியுள்ளார். தில் ராஜூ தயாரிக்கும் இந்தப் படத்தின் முதல் ஷெட்யூல் புணே அருகே நடந்தது. அடுத்தக்கட்டப் படப்பிடிப்புகள், ராஜமுந்திரி, காக்கிநாடா, மேற்கு கோதாவரி, அமிர்தசரஸில் நடந்தது. இப்போது விசாகப்பட்டினத்தில் நேற்று முதல் படப்பிடிப்பு நடந்து வருகிறது. ராம் சரண், கியாரா அத்வானி உட்பட பலர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படுகின்றன.
இந்தப் படத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக நடிக்கும் ராம் சரணுக்கு பலவித கெட்டப்புகள் இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன், இதன் படப்பிடிப்பில் இருந்து ராம்சரணின் புகைப்படம் கசிந்தது. கிராமத்து பெரியவர் போன்ற தோற்றத்தில் ராம் சரண், வெள்ளை வேஷ்டி, சட்டையுடன் சைக்கிளில் செல்லும் அந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலானது.
இந்நிலையில் இப்போது இதன் படப்பிடிப்பில் இருந்து புதிய ஸ்டில் ஒன்று கசிந்துள்ளது. விசாகப்பட்டினம் கடற்கரையில் போக்குவரத்து போலீஸார் ராம்சரணிடம் விசாரிப்பது போன்று அந்த ஸ்டில் இருக்கிறது. இதில் ராம் சரண் ஸ்டைலாக இருக்கிறார். இந்த புகைப்படமும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.