ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் 'ஜெயிலர்'. இப்படத்தை நெல்சன் இயக்கி உள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் முத்துவேல் பாண்டியன் என்கிற சிறை வார்டன் கதாபாத்திரத்தில் ரஜினி நடித்திருக்கிறார். இதில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, மோகன்லால், ஷிவ ராஜ்குமார், ஜாக்கி ஷெராப், தமன்னா, சுனில் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தின் முதல் சிங்கிள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இன்று இரண்டாவது சிங்கிள் வெளியாக உள்ளது. இந்தநிலையில், 'ஜெயிலர்' படத்துக்கு புதிதாக சிக்கல் எழுந்துள்ளது. மலையாளத்தில் பிரபலமான இயக்குனராக உள்ள சக்கீர் மடத்தில் என்பவர் 'ஜெயிலர்' என்ற பெயரில் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். தயன் சீனிவாசன் என்பவர் நடித்துள்ள இத்திரைப்படத்தை என்.கே.மொகம்மது தயாரித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படமும், மலையாளத்தில் உருவாகி வரும் 'ஜெயிலர்' படமும் ஒரே நேரத்தில் கேரளாவில் வெளியாக உள்ளது.
இந்தநிலையில், செய்தியாளர்களை சந்தித்த சக்கீர் மடத்தில், 'ஜெயிலர்' என்ற பெயரில் இரண்டு படங்களும் ரிலீஸானால் ரசிகர்களுக்கு குழப்பம் ஏற்படும். எனவே தமிழ் ஜெயிலரின் பெயரை படக்குழு கேரளாவில் மாற்றி வெளியிட வேண்டும் என அவர் கோரிக்கை வைத்திருக்கிறார். மேலும் இதுதொடர்பாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தை அணுகியதாகவும் ஆனால் பெயரை மாற்றுவதற்கு அந்த நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
ரஜினி நடிக்கும் 'ஜெயிலர்' படத்துக்கு இந்தப் பெயர்தான் கதைக்கு பக்காவாக பொருந்துகிறது. எனவே இந்தப் பெயரை மாற்றினால் கதைக்கும், பெயருக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. எனவே நிச்சயம் பெயரை படக்குழு மாற்றுவதற்கு வாய்ப்பில்லை என்பதால் இதே பெயரில்தான் கேரளாவில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.