
‘காந்தாரா 2’-ல் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கிறாரா என்ற கேள்விக்கு ரிஷப் ஷெட்டி விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த ஆண்டு ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த ‘காந்தாரா’ திரைப்படம் கன்னடம் மட்டுமல்லாது, பல மொழிகளிலும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று, 400 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.
தற்போது ‘காந்தாரா2’ படத்திற்கான பணிகளில் ரிஷப் ஷெட்டி பிஸியாக இருக்கிறார். இது ‘காந்தாரா’ படத்தின் ப்ரீக்குவலாக இருக்கும் எனவும் தெரிவித்திருக்கிறது படக்குழு. ’காந்தாரா’ படம் வெளியானபோது, படத்தைப் பார்த்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த், ரிஷப் ஷெட்டியை நேரில் அழைத்துப் பாராட்டி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்தப் புகைப்படங்கள் அப்போது இணையத்தில் வைரலானது.
இந்த நிலையில், தாதா சாகப் பால்கே விருது பெற்ற பிறகு பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து பேசினார் ரிஷப் ஷெட்டி. அப்போது அவரிடம், ’காந்தாரா2’-ல் ரஜினிகாந்த் நடிக்கிறாரா எனக் கேட்கப்பட்டது. அதற்கு ரிஷப்ஷெட்டி, " அது குறித்து இப்போது வெளிப்படையாக எதுவும் தெரிவிக்க முடியாது" எனக் கூறியுள்ளார் .
இதனையடுத்து, ரஜினிகாந்த் ‘காந்தாரா2’-ல் இல்லை என ரிஷப்ஷெட்டி சொல்லவில்லை. அதனால் ரஜினி நடிக்க வாய்ப்பிருப்பதாக ரசிகர்கள் இணையத்தில் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.