நடிகர் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதன் மூலமாக ரஜினிகாந்த் மீண்டும் தாத்தாவாகியுள்ளார்.
முதல் திருமண விவாகரத்துக்கு பின்னர் நடிகர் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் 2019ம் ஆண்டு விசாகன் வணங்காமுடி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அஸ்வின் - சவுந்தர்யாவின் மகனான வேத், சௌந்தர்யாவிடம் வளர்ந்து வருகிறார். தற்போது சௌந்தர்யா ரஜினிகாந்த்-விசாகன் தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. இந்த மகிழ்ச்சியான செய்தியினை அவர் தனது ட்விட்டர் வாயிலாக தெரிவித்ததோடு தனது மகனின் பெயரையும் தெரிவித்துள்ளார்.
புதிதாக பிறந்த ஆண் குழந்தைக்கு வீர் ரஜினிகாந்த் வணங்காமுடி என்று பெயர் சூட்டியுள்ளதாக சௌந்தர்யா தெரிவித்துள்ளார். மேலும் கர்ப்ப காலத்தில் எடுத்த புகைப்படங்கள், மகன் வேத் மற்றும் கணவர் விசாகனுடன் இருக்கும் படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.
சௌந்தர்யாவின் ட்விட்டர் பதிவில், 'கடவுளின் ஆசீர்வாதத்தோடும், எங்கள் பெற்றோர்களின் ஆசீர்வாதத்தோடும் வேதின் சகோதரன் வீர் ரஜினிகாந்த் வணங்காமுடியை நானும், விசாகனும், எனது மகன் வேத்-தும் வரவேற்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்” என்று தெரிவித்துள்ளார். நேற்று குழந்தை பிறந்ததாக தெரிவித்த அவர், மருத்துவர்களுக்கும் நன்றி கூறியுள்ளார். புதிய பேரனின் வரவால் ரஜினியின் குடும்பம் தற்போது உற்சாகத்தில் உள்ளனர்.