ரஜினிகாந்த் - லதா தம்பதிக்கு திருமணமாகி இன்றோடு 42 ஆண்டுகள்: ரஜினி திருமணத்தின் சுவாரஸ்ய கதை!

ரஜினி லதா திருமணம்
ரஜினி லதா திருமணம்ரஜினிகாந்த் - லதா தம்பதிக்கு திருமணமாகி இன்றோடு 42 ஆண்டுகள் நிறைவு: ரஜினி திருமணத்தின் சுவாரஸ்ய கதை

தமிழ் சினிமாவில் இன்றும் அசைக்க முடியாத இடத்தில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இவருக்கும் லதாவுக்கும் திருமணமாகி இன்றோடு 42 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இவர்களின் திருமணத்தின் சுவாரஸ்ய கதையை பார்ப்போம்.

ரஜினிகாந்த் புகழின் உச்சியில் இருந்த நேரம். அப்போது அவருக்கு பெண் ரசிகைகள் ஏராளம். ரஜினியின் ஸ்டைலில் மனதைப் பறிகொடுத்த ஏராளமான பெண்களும், கல்லூரி மாணவிகளும் எழுதும் காதல் கடிதங்கள் அவருக்கு குவிந்த வண்ணம் இருக்கும். ரஜினியுடன் நடித்த நடிகைகள் சிலரும், அவரை மணக்க விரும்பினர். ஆனால், ரஜினியின் மனதை யாரும் கவரவில்லை.

ரஜினி 30 வது வயதில் அடியெடுத்து வைத்தபோது, அவரின் வாழ்விலும் அந்தப் பூ பூத்தது. 1980-ம் ஆண்டு கே.பாலசந்தர் இயக்கத்தில் ‘தில்லுமுல்லு’ படம் உருவாகிக் கொண்டிருந்தது. இதன் படப்பிடிப்பு, நடிகை சவுகார் ஜானகியின் வீட்டில் நடந்து கொண்டிருந்தபோது, எத்திராஜ் கல்லூரி மாணவிகள் சிலர் அங்கு வந்தனர். அவர்களில் லதாவும் ஒருவர். கல்லூரியின் சிறப்பிதழுக்கு பேட்டி காண வந்திருப்பதாக லதா ரஜினியிடம் கூறினார், அவரும் பேட்டிக்கு சம்மதித்தார்.

பேட்டியின்போது, லதா தமிழிலும், ஆங்கிலத்திலும் சரமாரியாகக் கேள்விகள் கேட்டார். அதற்கெல்லாம் சளைக்காமல் தன் பாணியில் அசத்தலாக பதில் சொன்னார் ரஜினி. லதாவின் அழகும், புத்திசாலித்தனமும் ரஜினியைக் கவர்ந்தன. அப்போது "உங்கள் திருமணம் எப்போது?'' என்று லதா கேட்க, "குடும்பப் பாங்கான பெண் கிடைக்கும்போது என் திருமணம் நடைபெறும்'' என்று ரஜினி பதிலளித்தார். உடனே, "விளக்கமாக சொல்லுங்கள்'' என்று லதா கேட்க, "உங்களை மாதிரி பெண் கிடைத்தால், நான் திருமணம் செய்து கொள்வேன்'' என்று தடாலடியாக பதிலளித்த ரஜினி, தன் காதலை மறைமுகமாக வெளிப்படுத்தினார்.

தொடர்ந்து லதா குறித்து விசாரித்தபோது, அவர் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் மனைவியின் தங்கை என்று தெரிய வந்தது. முன்னரே மகேந்திரனும், ரஜினியும் நண்பர்கள். எனவே, லதாவை பார்த்ததற்கு மறுநாள், மகேந்திரனை அழைத்து "நான் லதாவை மணந்து கொள்ள விரும்புகிறேன்'' என்று ரஜினி கூறினார். ரஜினி யாரைக் குறிப்பிடுகிறார் என்பது, மகேந்திரனுக்கு சட்டென்று புரியவில்லை. எம்ஜிஆருடன் படங்களில் நடித்து வரும் லதாவைத்தான் ரஜினி குறிப்பிடுகிறாரோ என்று அவர் நினைத்தார்."என்னப்பா! லதா, உனக்கு சீனியர் நடிகை. எம்.ஜி.ஆரோடு எல்லாம் நடித்தவர். அவரையா நீ காதலிக்கிறாய்?'' என்று கேட்டார். உடனே ரஜினி, "நான் கூறுவது நடிகை லதாவை அல்ல. உன் மனைவியின் தங்கை லதாவைத்தான் கூறுகிறேன்'' என்றார். ஒரு நிமிடம் திகைத்து நின்ற மகேந்திரன், "சரி. இதுபற்றி என் குடும்பத்தாருடன் பேசுகிறேன்'' என்றார்.

ரஜினி
ரஜினிரஜினிகாந்த் - லதா தம்பதிக்கு திருமணமாகி இன்றோடு 42 ஆண்டுகள் நிறைவு: ரஜினி திருமணத்தின் சுவாரஸ்ய கதை

லதாவை ரஜினி மணக்க விரும்புவதை, தன் மனைவியிடமும், குடும்பத்து பெரியவர்களிடமும் மகேந்திரன் தெரிவித்தார். குடும்பத்தினர் எல்லோருக்கும் மிகுந்த மகிழ்ச்சி, லதாவும் சம்மதம் தெரிவித்தார். ஆனாலும், இதை ரகசியமாக வைத்திருந்தார்கள். இந்த நிலையில், ரஜினிகாந்துக்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது என்ற செய்தியை "தினத்தந்தி'' வெளியிட்டு விட்டது. மணமகள் லதா என்பதையும் செய்தியில் குறிப்பிட்டிருந்தது. இச்செய்தி, தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. திரை உலகில் இதுபற்றித்தான் பேச்சு.

ரஜினி எதுவும் பேசாமல் மவுனம் காத்தார். சில மாதங்களுக்குப் பின்னர் 1981 பிப்ரவரி 25-ந்தேதி மாலை 4 மணிக்கு, நிருபர்களை திடீரென்று ரஜினி அழைத்தார். நிருபர்களிடம் அவர், "லதாவுடன் எனது காதல் கனிந்து, கடவுள் அருளால் திருமணம் நடைபெறுகிறது. வாழ்க்கையின் இன்ப - துன்பங்களை உணர்ந்தவன் மட்டுமல்ல; அனுபவித்து அறிந்தவன் நான். முதுகில் தழும்பேற மூட்டை சுமந்து, `மில்லி' அடித்து, வாழ்க்கையின் மேடு - பள்ளங்கள் அனைத்தையும் உணர்ந்து இந்த நிலைக்கு வந்திருக்கிறேன். "தில்லு முல்லு'' படத்தின் படப்பிடிப்பின் போது எத்திராஜ் கல்லூரி மாணவிகள் சிலர் வந்தனர். அவர்களில் ஒருவர் லதா. அவர் என்னிடம் பேட்டி எடுத்தார். அப்போது திருமணம் குறித்து லதா என்னிடம் கேள்வி கேட்டார். நான், ”உங்களை மாதிரி ஒரு பெண் கிடைத்தால் நான் கல்யாணம் செய்து கொள்வேன்'' என்றேன். நாணத்தால் லதாவின் முகம் சிவந்து விட்டது. தொடர்ந்து, இதுபற்றி ஒய்.ஜி.மகேந்திரனிடம் பேசினேன்.

லதாவிடமும், லதாவின் பெற்றோரிடமும் பேசி அவர்களின் சம்மதம் கிடைத்தது. நான் பெங்களூர் சென்று என் அண்ணனிடம் லதா பற்றி கூறினேன். முதலில் அவர் அதிர்ச்சி அடைந்தார். `அந்தப் பெண் நம்ம சாதி இல்லேன்னு சொல்றே. மராத்தியில் கிடைக்காத பெண்ணா உனக்கு மதராசில் கிடைக்கப்போகுது?'' என்று கேட்டார். பிறகு என் அண்ணனும் சம்மதம் தெரிவித்தார்''இவ்வாறு ரஜினி கூறினார். பின்னர் தன் திருமணம் 26-2-1981 அன்று திருப்பதியில் நடைபெற இருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் ரஜினிகாந்த்.

லதாவுடன் ரஜினி
லதாவுடன் ரஜினிபடம் உதவி: ஞானம்

தொடர்ந்து பேசிய அவர், "எனது திருமணத்துக்கு அழைப்பிதழ் அச்சிடப்படவில்லை. என் திருமணத்துக்கு உடன் பிறந்தவர்கள் தவிர, வேறு எவரையும் அழைக்கவில்லை. வயது முதிர்ந்த என் தந்தையிடம் கூட, மானசீகமாகத்தான் வாழ்த்து பெற இருக்கிறேன். பெங்களூரில்என்னுடன் உண்டு உறங்கிய சில பஸ் கண்டக்டர்களை மட்டும் திருமணத்துக்கு அழைத்திருக்கிறேன். தெய்வத்தின் சந்நிதானத்தில் என் திருமணம் நடைபெறுகிறது. தெய்வம் என்னையும், என் குடும்பத்தையும் ஆசீர்வதித்தால் அதுவே போதும். வெறும் மஞ்சள் கயிற்றில் கோர்த்த தாலியைத்தான் நான் லதா கழுத்தில் கட்டப்போகிறேன்.

இன்று நான் இருக்கும் நிலையில் 4 ஆயிரம் பேர் என்ன, 4 லட்சம் பேருக்கு அறுசுவை உணவு வழங்க முடியும். ஆனால், கோடீசுவரன் என்றாலும், திருமண விழாவுக்கு பணத்தை விரயம் செய்வதை நான் வெறுக்கிறேன். பசி அறியாதவர்கள் என் திருமணத்துக்கு வந்து விருந்துண்டு போவதைவிட, பசித்தவர்களுக்கு சோறு போட நினைக்கிறேன். எனவே, சென்னையில் உள்ள சில அனாதை விடுதிகளில் உள்ளவர்களுக்கு சீருடையுடன் உணவும் வழங்க ஏற்பாடு செய்திருக்கிறேன்''என்று ரஜினிகாந்த் கூறினார்

வழக்கம் போல் "தேன் நிலவுக்கு எங்கே போகப்போகிறீர்கள்?'' என்று கேட்டதற்கு "தேன் நிலவாவது, சர்க்கரை நிலவாவது? `விஸ்கி' அடித்தால், தினமும் தேன் நிலவுதான்! எனினும் இனி நான் `டிரிங்க்' செய்வதை குறைத்துக் கொண்டு விடுவேன். உடல் நலமே முக்கியம். சுவர் இருந்தால்தானே சித்திரம் தீட்ட முடியும்! இதை கவனிக்கும் பொறுப்பு, இனி என்னை விட என் லதாவுக்கு அதிகம் உண்டு.'' என்று ரஜினிகாந்த் கூறினார்.

"செய்தி சேகரிப்பதற்காக திருமணத்துக்கு நிருபர்கள், புகைப்படக்காரர்கள் வரலாமா?'' என்று ஒரு நிருபர் கேட்டார். அப்போது, லதாவுடன் கழுத்தில் மாலையுடன் இருக்கும் புகைப்படத்தை நிருபர்களிடம் ரஜினி கொடுத்தார். "திருமணத்துக்குப் பிறகு இந்தப் படத்தை போட்டுக் கொள்ளுங்கள். வரவேற்பு நிகழ்ச்சியை பின்னர் சென்னையில் நடத்தப் போகிறேன். அப்போது ஒவ்வொருவரையும் நேரில் அழைப்பேன். திருப்பதி கோவிலில் மாலை மாற்றி தாலி கட்ட விசேஷ அனுமதி பெற்று இருக்கிறேன். அங்கே பத்திரிகையாளர்களும், ரசிகர்களும் வந்து கூட்டம் கூடினால் பிரச்சினை ஏற்படும். எனவே, திருமணத்துக்கு யாரும் வரவேண்டாம்'' என்றார் ரஜினி.

"வந்தா...?'' என்று ஒரு நிருபர் கேட்க, ரஜினி `டென்ஷன்' ஆகி, "உதைப்பேன்'' என்றார். இந்த பதில், நிருபர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. "ரஜினி! இந்த மாதிரி வார்த்தைகளை எல்லாம் பயன்படுத்தாதீர்கள். இதை அப்படியே பிரசுரித்தால் நன்றாக இருக்குமா?'' என்று மூத்த நிருபர் ஒருவர் கூறினார். அமைதி அடைந்த ரஜினி, "நீங்கள் நேருக்கு நேராக இப்படி கூறியதைப் பாராட்டுகிறேன். அப்படிச் சொன்னதற்கு வருந்துகிறேன்... சாரி! ஆனாலும், திருப்பதிக்கு யாரும் வரவேண்டாம். காமிராவோட யாரையாவது பார்த்துட்டா உதைக்கிறதைத் தவிர வேறு வழி தோணாது!'' என்றார், ரஜினி!

ரஜினி லதா
ரஜினி லதாரஜினிகாந்த் லதா திருமண நாள்

இதையடுத்து ரஜினிகாந்த் - லதா திருமணம், 26-2-1981 அன்று அதிகாலை திருப்பதியில் நடந்தது. திருமணம் முடிந்ததும், ரஜினி உடனடியாக சென்னைக்குத் திரும்பி, படப்பிடிப்பில் கலந்து கொண்டார். திருமணத்துக்கு முதல் நாள் இரவு, ரஜினிகாந்த் கார் மூலம் திருப்பதி சென்றார். ரஜினியின் அண்ணனும், ஒரு சில நெருங்கிய உறவினர்கள் மட்டும் உடன் சென்றனர். மணமகள் லதா, அவரது பெற்றோர், அக்காள் சுதா, ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோர் வேறொரு காரில் சென்றனர். திருமணம் முடிந்து, சாமி சந்நிதியை விட்டு ரஜினியும், லதாவும் வெளிவந்தபோது, இரண்டொரு பத்திரிகையாளர்களும், போட்டோகிராபர்களும் எப்படியோ அங்கு வந்து போட்டோ எடுக்க முயன்றனர். `எவ்வளவோ சொல்லியும் அதைக் கேட்காமல் இங்கு வந்துவிட்டார்களே' என்று டென்ஷன் ஆனார் ரஜினி. உறவினர்கள் அவரை சமாதானப்படுத்தி, வேறு வழியாக அழைத்துச் சென்றுவிட்டனர்.

திருப்பதியிலிருந்து அருகில் உள்ள திருச்சானூர் சென்று, பத்மாவதியை தரிசனம் செய்துவிட்டு, ரஜினிகாந்தும் மற்றவர்களும் உடனடியாக சென்னைக்குத் திரும்பினார்கள். அன்று காலை 10 மணிக்கு, ஏவி.எம்.ஸ்டூடியோவில் கே.பாலசந்தரின் "நெற்றிக்கண்'' படப்பிடிப்பில் கலந்துகொண்டார். திருமணத்துக்கு 2 வாரம் கழித்து மார்ச் 14-ம் தேதி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் கோரமண்டல் ஓட்டலில் வரவேற்பு நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினார் ரஜினி. திருமணத்தின்போது லதா, சென்னை எத்திராஜ் கல்லூரியில் பி.ஏ இறுதியாண்டு படித்துக்கொண்டிருந்தார். திருமணத்துக்குப் பிறகும் 2 மாதம் தொடர்ந்து கல்லூரிக்குச் சென்று படித்து, பரீட்சை எழுதி பட்டம் பெற்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in