``மகேஷ் பாபு நடிக்கும் படத்துக்காக இரண்டு கதைகள் மனதில் இருக்கிறது'' என்று இயக்குநர் ராஜமவுலி தெரிவித்துள்ளார்.
ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில், ராஜமவுலி இயக்கிய படம், ’ஆர்ஆர்ஆர்’. டிவிவி தானய்யா தயாரித்த இந்தப் படத்தில் இந்தி நடிகர் அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, வெளிநாட்டு நடிகை ஒலிவியா மாரிஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். ஆலியா பட், ராம் சரணின் காதலியாக நடித்துள்ளார்.
இந்த பிரம்மாண்ட படத்தை திரைத் துறையினர், ரசிகர்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர். வசூலிலும் சாதனை படைத்து வருவதால் படக்குழு மகிழ்ச்சி அடைந்துள்ளது. இந்தி திரையுலகிலும் இந்தப் படம் அதிக வசூலை ஈட்டியுள்ளது. ஆயிரம் கோடி ரூபாய் வசூலை எட்டிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, ராஜமவுலி இயக்கும் படத்தில் மகேஷ் பாபு ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்தின் கதை இன்னும் முடிவாகவில்லை என்றும் இரண்டு கதைகள் மனதில் இருப்பதாகவும் ராஜமவுலி கூறியுள்ளார். அதுவும் மெகா பட்ஜெட் படம் என்றும் இந்த வருட இறுதியில் அதற்கான வேலைகள் தொடங்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.