'சந்திரமுகி 2' சஸ்பென்ஸ் உடைத்த ராகவா லாரன்ஸ்!

சந்திரமுகி 2
சந்திரமுகி 2

'சந்திரமுகி 2' படத்தில் வேட்டையன் கதாபாத்திரத்தில் சஸ்பென்ஸ் உள்ளது என நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் P.வாசு இயக்கத்தில் நடிகர்கள் ராகவா லாரன்ஸ், வடிவேலு உட்பட பல்வேறு பிரபலங்கள் நடிப்பில் உருவான 'சந்திரமுகி இரண்டாம் பாகம்' வருகின்ற 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. பல்வேறு மொழிகளில் திரைக்கு வரவுள்ள இப்படத்திற்கான பிரமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் பிரமோஷன் பணிகளின் ஒரு நிகழ்வு கோவையில் உள்ள லூலூ மாலில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் நடிகை மகிமா நம்பியார் பொது மக்களிடையே இப்படம் குறித்து உரையாடினர். மேலும் அந்த மாலில் பொருட்கள் வாங்கும் நபர்களுக்கு நடத்தப்பட்ட ஒரு மாத கால போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஒரு கார் இரண்டு இருசக்கர வாகனங்கள், செல்போன் மற்றும் சமையல் உபகரணங்களை நடிகர் ராகவா லாரன்ஸ் வழங்கினார். தொடர்ந்து பொதுமக்களிடமும் குழந்தைகளுடனும் புகைப்படம் எடுத்து கொண்டு நடனமாடி மகிழ்ந்தார்.

இந்நிகழ்வில் நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் மகிமா நம்பியார் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய நடிகை மகிமா நம்பியார், இப்படம் திரையரங்குகளுக்கு வரவுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் அனைவரும் திரையரங்குகளில் சென்று பார்க்கும் படி கேட்டுக்கொண்டார். பின்னர் பேசிய நடிகர் ராகவா லாரன்ஸ், கோவைக்கு வருவது எனக்கு மிகவும் பிடித்தமான விஷயம் எனவும் அடிக்கடி ஈஷா யோகாவிற்கு வருவேன் எனவும் கூறினார்.

மேலும் கோவை மக்கள் எப்பொழுது பேசினாலும் மிகவும் மரியாதையாக "அண்ணா" என்ற வார்த்தையை குறிப்பிட்டு பேசும் அன்பே எனக்கு மிகவும் பிடிக்கும் எனவும் தெரிவித்தார். திரைப்படத்தை அனைவரும் திரையரங்குகளுக்கு சென்று பாருங்கள் என கேட்டுக்கொண்ட அவர், 'சந்திரமுகி' முதல் பாகத்தை எப்படி கொண்டாடினீர்களோ, அதில் உள்ள அனைத்து விஷயங்களும் இதில் இருக்கும் என்றார்.

நடிகர் ரஜினி நடித்த இந்த படத்தை நான் திரையரங்கில் பார்த்துள்ளேன் என கூறிய அவர், தற்பொழுது அதில் நடித்திருப்பது கடவுள் எனக்கு அளித்த ஆசீர்வாதம் என்றார். மேலும் ‘சந்திரமுகி’ முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாக கதைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என தெரிவித்த அவர் முதல் பாகத்தில் நடிகை ஜோதிகா சந்திரமுகி போல் நினைத்துக் கொண்டார். இதில் ஒரிஜினல் சந்திரமுகி வந்தால் எப்படி இருக்கும் என்பதுதான் கதை என்றார்.

மேலும் இது குறித்தான ஒரு வசனத்தை "ஒரிஜினல் சந்திரமுகி பீசே வருது" நடிகர் வடிவேல் கூறி இருப்பார் அது இந்த படத்திலும் வருகிறது என்றார். இந்த படத்தில் வேட்டையன் கதாபாத்திரத்தில் ஒரு சஸ்பென்சும் உள்ளது எனவும், படத்தை பார்க்கும் பொழுது அது வேட்டையனா? அல்லது வேட்டையன் போல் வேறு ஒருவரா என தெரியவரும் என்றார். இந்த படத்தை இயக்குனர் வாசு மிகச் சீரியசாக எடுத்துள்ளார் எனவும் கூறினார்.

ரஜினியை விட சூப்பராக பண்ண வேண்டும் என என்றைக்கும் நினைக்கக் கூடாது எனவும், நினைத்தாலும் அதுபோல வராது எனவும், ரஜினி ரஜினி தான் எனவும் கூறினார். எனவே எனக்கு அளித்த கதாபாத்திரத்தை பயந்து செய்துள்ளேன் என்றார். நான் மாத்தி மாத்தி தான் படங்களை செய்கிறேன். ஆனால் உங்கள் கண்களுக்கு பேய் படங்கள் மட்டும் தான் தெரிகிறது என கூறினார். பேயை பார்த்திருக்கிறீர்களா என்ற கேள்விக்கு என்னை தினமும் கண்ணாடியில் பார்க்கிறேன் என நகைச்சுவையாக பதிலளித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in