முதல் பாகத்தை விட 2 மடங்கு பிரம்மாண்டம்: வெளிநாட்டுப் பின்னணியில் 'புஷ்பா 2’ ?

முதல் பாகத்தை விட 2 மடங்கு பிரம்மாண்டம்: வெளிநாட்டுப் பின்னணியில் 'புஷ்பா 2’ ?

’புஷ்பா 2’ படத்தை முதல் பாகத்தை விட இரண்டு மடங்கு பிரம்மாண்டமாக உருவாக்க இருக்கின்றனர்.

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற படம், ’புஷ்பா’. சுகுமார் இயக்கிய இந்தப் படத்தில், ராஷ்மிகா மந்தனா நாயகி. மலையாள நடிகர் பஹத் ஃபாசில், கன்னட நடிகர் தனஞ்செயா, சுனில், அஜய் கோஷ், ராவ் ரமேஷ், மைம் கோபி, பிரம்மாஜி உட்பட பலர் நடித்தனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்கள் ஹிட்டாகின. நடிகை சமந்தா ’ஊ சொல்றியா மாமா’ என்ற பாடலுக்கு ஆடியிருந்தார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் படத்தைத் தயாரித்திருந்தது.

தெலுங்கு தவிர, தமிழ், இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் வெளியான இந்தப் படம் அனைத்துப் பகுதியிலும் வரவேற்பைப் பெற்றது. செம்மரக் கடத்தல் பின்னணியில் உருவான இந்தப் படத்தின் அடுத்த பாகத்துக்கான வேலைகளைப் படக்குழு தொடங்கி இருக்கிறது. ஜூலை மாத இறுதி அல்லது ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. முதல் பாகத்தை விட பிரம்மாண்டமாக இரண்டாம் பாகத்தை உருவாக்க உள்ளனர்.

கதையை வெளிநாட்டுப் பின்னணியில் எடுக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. செம்மரக் கடத்தல் தாதாவாக மாறும் புஷ்பா, வெளிநாடுகளில் தன் ஆதிக்கத்தை எப்படி செயல்படுத்துகிறார் என்பது போல இதன் கதை அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்காக சீனா, ஜப்பான், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் படப்பிடிப்பை நடத்த உள்ளனர். ’புஷ்பா 2’ படத்தில் ராஷ்மிகா தவிர இன்னொரு நாயகியும் நடிக்க இருக்கிறார். பாலிவுட் நடிகை ஒருவர் ஒரு பாடலுக்கு ஆட இருக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in