'பொன்னியின் செல்வன்' இசை வெளியீட்டு விழாவில் நடிகர் அஜித்தின் உதவியாளரும், மக்கள் தொடர்பாளருமான சுரேஷ் சந்திராவின் உதவியாளரை பவுன்சர்கள் தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
எழுத்தாளர் கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலை இயக்குநர் மணிரத்னம் அதே பெயரில் படமாக்கி வருகிறார். அந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகிறது. அதில் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது.
இந்த நிலையில், பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் படத்தில் நடித்த கலைஞர் மற்றும் தமிழ் சினிமா பிரபலங்களும் கலந்துகொண்டுள்ளனர்.
சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் கலந்து கொண்டனர். இயக்குநர் மணிரத்னம், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், நாசர், பார்த்திபன், சித்தார்த், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, அதிதி ராவ் உள்பட பலர் பங்கேற்றனர்.
இவ்விழாவைக் காண பொதுமக்கள் பெருமளவு திரண்டனர். காவல் துறை பாதுகாப்பு, பவுன்சர்கள் பாதுகாப்பு என அரங்கம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் நடிகர் அஜித்தின் உதவியாளரும், மக்கள் தொடரர்பாளருமானள சுரேஷ் சந்திராவின் உதவியாளர் விக்கி என்பவரை பவுன்சர்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு இருதரப்புக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் அங்கு பதற்றம் நிலவியது. இதையடுத்து அங்கு வந்த போலீஸார், அவர்களைச் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனாலும், கோபமடைந்த செய்தியாளர்கள் உள் விளையாட்டு அரங்கம் முன் முற்றுகை போராட்டம் நடத்தினர். அவர்களை போலீஸார் சமாதானம் செய்யும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து இன்று இரவு காவல் துறையில் புகார் கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.