வெற்றியில் பங்குபெறும் ஹீரோக்கள், தோல்வியிலும் பங்குபெற வேண்டும் என்று தயாரிப்பாளர் கே.ராஜன் கூறினார்.
சூர்யா பிலிம் புரொடக் ஷன்ஸ் சார்பாக, மகேஷ்வரன் நந்தகோபால் தயாரித்துள்ள படம், ’சிட்தி’. தமிழ், மலையாளத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தை பயஸ் ராஜ் இயக்கியுள்ளார். அஜி ஜான் கதாநாயகனாகவும் அக் ஷயா உதயகுமார், ஹரிதா நாயகிகளாகவும் நடித்துள்ளனர்.
சட்டக் கல்லூரி மாணவன் ‘சிட்தி’ தவிர்க்க முடியாத சூழ்நிலையில் கொலையாளியாக மாறுகிறார். ஏன் அப்படி மாறினார் என்பதுதான் கதை. இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் நடைபெற்றது. விழாவில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், தயாரிப்பாளர் கே.ராஜன், நடிகர் ஆரி, சண்முகம் முத்துசாமி, இசையமைப்பாளர் ரமேஷ் நாராயணன் உட்பட பலர் கலந்துகொண்டனர். விழாவில், தயாரிப்பாளர் கே. ராஜன் பேசியதாவது:
மலையாளத்தில், சினிமாவுக்கு உண்மையாக இருப்பார்கள். இப்போது நான் மலையாளப்படம் பார்க்க ஆரம்பித்துவிட்டேன். தமிழ் சினிமாவில் தயாரிப்பாளரை சிரமப்படுத்துகிறார்கள், அவர்களை காப்பாற்றுங்கள் என்று தான் கேட்கிறேன். கேரளாவில் எல்லா நடிகர்களும் உதவி செய்கிறார்கள். இங்கே யார் உதவி செய்கிறார்கள்? கரோனா காலத்தில் ரஜினி சார் போன் செய்து என்ன உதவி வேண்டும் எனக்கேட்டு 100 மூட்டை அரிசி கொடுத்தார்.
ராம் சரண் படம் தோற்றபோது தயாரிப்பாளருக்கு 15 கோடியை திருப்பிக் கொடுத்தார். ‘ராதே ஷ்யாம்’ படம் தோல்வி, பிரபாஸ் அந்த படத்திற்கு வாங்கிய பணத்தில் ரூ.50 கோடியை திருப்பி கொடுத்துவிட்டார். ராம் சரண், பிரபாஸை வணங்குகிறேன். வெற்றியில் பங்கு கொள்ளும் ஹீரோக்கள் தோல்வியிலும் பங்குகொள்ள வேண்டும்.
இவ்வாறு கே.ராஜன் பேசினார்.