நடிகர் பிரசன்னா முதன்முறையாக, இந்தி வெப் தொடரில் நடிக்கிறார்.
தமிழில், ’பைவ் ஸ்டார்’ படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் பிரசன்னா. தொடர்ந்து அழகிய தீயே, சாதுமிரண்டா, அஞ்சாதே, அச்சமுண்டு அச்சமுண்டு, பாணா காத்தாடி, திருட்டு பயலே 2, துப்பறிவாளன் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். வெப் தொடர்களிலும் அவர் நடித்து வருகிறார். இந்நிலையில், அவர் முதன்முறையாக இந்தி வெப்தொடரில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது.
இந்த தொடரில் லாரா தத்தா, ஆசிஷ் வித்யார்த்தி உட்பட பலர் நடிப்பதாகக் கூறப்படுகிறது. பிரபல மும்பை நிறுவனம் ஒன்று தயாரிக்கும் இந்தத் தொடரை அறிமுக இயக்குநர் ஒருவர் இயக்குகிறார். உண்மைச் சம்பவக் கதையை மையமாக வைத்து இந்தியில் உருவாகும் இந்தத் தொடர், தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் டப் ஆகி வெளியாகும் என்று தெரிகிறது.
இதுபற்றி தனது சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ள நடிகர் பிரசன்னா, ``கருணை காட்டிய கடவுளுக்கும் அவருடைய அனைத்து ஆசிகளுக்கும் நன்றி. இப்போது மும்பையில் இருந்து புதிய தொடக்கம் கிடைத்திருக்கிறது. உங்கள் வாழ்த்து என்னை மகிழ்விக்கும்'' என்று கூறியுள்ளார்.