‘அப்பு' நினைவாக ஆம்புலன்ஸ்: பிரகாஷ்ராஜின் பெருந்தன்மை!

‘அப்பு' நினைவாக ஆம்புலன்ஸ்: பிரகாஷ்ராஜின் பெருந்தன்மை!

கன்னட நடிகர் ராஜ்குமாரின் இளைய மகன் புனித் ராஜ்குமார், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மாரடைப்பால் மரணமடைந்தார். இளம் வயதிலே அவர் மறைந்தது இந்திய அளவில் திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ‘அப்பு’ எனச் செல்லமாக அழைக்கப்படும் புனித், பாடகர், தயாரிப்பாளர் எனப் பன்முகங்களைக் கொண்டிருந்தார்.

அவர் நினைவாக, பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ், மைசூர் மிஷன் மருத்துவமனைக்கு இலவச ஆம்புலன்ஸ் ஒன்றை நன்கொடையாக வழங்கியுள்ளார். புனித் ராஜ்குமாரை நினைவுபடுத்தும் விதமாக, ‘அப்பு எக்ஸ்பிரஸ்’ என்று இந்த ஆம்புலன்ஸுக்கு பெயரிடப்பட்டுள்ளது.

இதற்காக நடந்த விழாவில் பேசிய பிரகாஷ் ராஜ், நூற்றாண்டுக்கும் மேலாக ஏழைகளுக்காகச் சேவை செய்து வரும் மிஷன் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வழங்குமாறு நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகள் கேட்டுக்கொண்டதாகத் தெரிவித்தார்.

“கர்நாடக மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இதுபோன்ற இலவச ஆம்புலன்ஸ் சேவை செயல்பட வேண்டும் என்பதே எனது கனவு. இதற்காக நிதி திரட்டவும் தயங்க மாட்டேன்” என்று கூறிய பிரகாஷ் ராஜ், ஏழைகளின் சேவைக்காக, மிஷன் மருத்துவமனை வளாகத்தில் ரத்த வங்கி அமைக்கப் போவதாகவும் தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in