அரசியல் த்ரில்லர் கதையை கொண்ட படத்தில் பிரஜன் நாயகனாக நடிக்கிறார்.
ஸ்ரீ கிருஷ்ணா பிலிம் புரொடக்ஷ்ஸ் சார்பில் எஸ்.வி. சூரியகாந்த் தயாரிக்கும் படத்தை இரட்டை இயக்குநர்களான சங்கர் - கென்னடி இயக்குகின்றனர். பெயரிடப்படாத இந்த படத்தில் பிரஜன் நாயகனாக நடிக்கிறார். இன்னொரு நாயகனாக ஆஜீத் நாயக் அறிமுகமாகிறார். நாயகிகளாக பிரகயா நயன், ரஷ்மி நடிக்கிறார்கள்.
இவர்களுடன் ஜெயப்பிரகாஷ், ராஜ்கபூர், பருத்திவீரன் சுஜாதா, ஷோபராஜ் உட்பட பலர் நடிக்கின்றனர். வினோத் குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
ஏ.ஆர். ரகுமானின் இசைப்பள்ளி மாணவர் விஜய் யாட்லீ இசை அமைக்கிறார். கன்னடத்தில் ஏழு படங்களுக்கு மேல் இவர் இசையமைத்துள்ளார்.
சித்தார்தா இணைத் தயாரிப்பு செய்யும் இந்தப் படத்தின் ஷூட்டிங் தர்மபுரியில் பூஜையுடன் இன்று தொடங்கியது. படம் பற்றி இயக்குனர்கள் ஷங்கர் மற்றும் கென்னடி கூறும்போது, இது, அரசியல் கலந்த கிரைம் திரில்லர் கதை. தவறான அரசியல்வாதிகளின் ஆதிக்கத்தால் சாமானிய மக்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதை சொல்கிறோம். நட்பின் ஆழத்தை யாரும் இதுவரை சொல்லாத கோணத்தில் சொல்கிறோம்’ என்றனர்.