‘நடிகை ராஷ்மிகா மந்தனாவிடம், அழகு இருக்கிறது, ஆனால், அன்பு இல்லையே’ என்று ரசிகர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
தமிழில் கார்த்தி ஜோடியாக ’சுல்தான்’ படத்தில் நடித்தவர் ராஷ்மிகா மந்தனா. தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர், சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ள, ’புஷ்பா’ படத்தில் அல்லு அர்ஜுன் ஜோடியாக நடித்திருந்தார். இந்தப் படம் வட இந்தியாவிலும் ராஷ்மிகாவுக்கு புகழைப் பெற்றுத் தந்துள்ளது. அவரை மும்பையிலும் ரசிகர்கள் அடையாளம் கண்டுகொள்கின்றனர்.
இந்நிலையில், சமீபத்தில் மும்பை சென்றிருந்த நடிகை ராஷ்மிகா, ஒரு ஓட்டலில் இருந்து வெளியே வந்தார்.
அப்போது அவரிடம் ஒரு சிறுமி, “பசியாக இருக்கிறது, உதவுங்கள்” என்று கேட்டார். அதைக் கண்டு சிரித்துக்கொண்டே நடிகை ராஷ்மிகா முன்னேற, அவரது பாதுகாவலர்கள் சிறுமியை விரட்டினர். அவர் காரில் ஏறிய பின்னர், மேலும் சில சிறுமிகள் சேர்ந்துகொண்டு, “பசிக்கிறது, உதவி செய்யுங்கள்” என்று ராஷ்மிகாவிடம் கேட்டனர். ஆனால் அவர் சிரித்தபடி கையை ஆட்டிக்கொண்டே காரில் ஏறிச் சென்றார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இதையடுத்து, ரசிகர்கள், ’ராஷ்மிகாவிடம் ’நேஷனல் கிரஷ்’ என்று கொண்டாடும் அழகு இருக்கிறது, ஆனால், அவருக்கு உதவுகின்ற மனதில்லையே’ என்று அவரை விமர்சித்து வருகின்றனர். ’ஒரு குழந்தை பசியாக இருக்கிறது என்று கேட்கும்போது, அவரால் எப்படி சிரித்துக்கொண்டு செல்ல முடிகிறது?’ என்றும் சரமாரியாக விளாசியுள்ளனர்.