’ராதே ஷ்யாம்’ படப்பிடிப்பில் தனக்கும் பிரபாஸுக்கும் பிரச்சினை ஏற்பட்டதாக வெளியான தகவல் குறித்து நடிகை பூஜா ஹெக்டே விளக்கம் அளித்தார்.
’பாகுபலி’ பிரபாஸ் நடித்துள்ள பிரம்மாண்ட படம், ’ராதே ஷ்யாம்’. இதில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ளார். சத்யராஜ் உட்பட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். 1970-களில் ஐரோப்பிய பின்னணியில் நடக்கும் காதல் கதையான இந்தப் படம், மெகா பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. வரும் 11 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் ரிலீஸ் ஆக இருக்கும் இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் இதன் படப்பிடிப்பில் பிரபாஸுக்கும் நடிகை பூஜா ஹெக்டேவுக்கும் பிரச்சினை ஏற்பட்டது என்றும் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தபோதே செய்திகள் வெளியாயின. நடிகை பூஜா ஹெக்டே, சரியான நேரத்துக்கு படப்பிடிப்புக்கு வராமல் இருந்தார், இதனால் கடுப்பான பிரபாஸ் அவரை திட்டியதாகவும் இருவரும் படப்பிடிப்பில் பேசிக்கொள்ளவே இல்லை என்றும் கூறப்பட்டது. ஆனால், இதைத் தயாரிப்பு நிறுவனம் மறுத்திருந்தது.
இதுபற்றி நடிகை பூஜா ஹெக்டேவிடம் கேட்டபோது, ’பிரபாஸ் இனிமையான மனிதர். அவர் எனக்கும் என் அம்மாவுக்கு வீட்டில் சமைத்த உணவுகளை அனுப்பினார். அவருடன் பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவம். மற்றபடி அவருக்கும் எனக்கும் பிரச்சினை என்று கூறப்படுவது ஆதாரமற்றது’ என்றார்.