
மணிரத்னம் இயக்கத்தின் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் , இந்தி ஆகிய 5 மொழிகளில் வரும் செப்டம்பர் 30 ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் ட்ரெய்லர், பாடல்கள், போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதால், படத்தின் மீதான ஆர்வமும் அதிகரித்துள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தின் புகைப்படங்கள், லிரிக்கல் வீடியோக்கள், வீடியோ கிளிப்களும் தினமும் வெளியிடப்பட்டு வருகிறது. ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்துள்ள விக்ரம் தனது ட்விட்டர் அக்கவுண்ட் பெயரை ‘ஆதித்த கரிகாலன்’ என மாற்றியுள்ளார். அதுபோலவே, ‘குந்தவை’ என த்ரிஷாவும், ‘அருண்மொழி வர்மன்’ என ஜெயம் ரவியும், ‘வந்தியதேவன்’ என கார்த்தியும் தங்கள் ட்விட்டர் பெயர்களை மாற்றியுள்ளனர்.
இதுபோல தினமும் ஏதேனும் அப்டேட்கள் வெளியாகி வரும் நிலையில், தற்போது ‘பொன்னியின் செல்வன்’ படக்குழுவினர் திருவனந்தபுரம் சென்றுள்ளனர். இயக்குநர் மணிரத்னம், நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, த்ரிஷா ஆகியோர் விமானத்தில் செல்லும் புகைப்படங்களை அவர்கள் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். மலையாளத்திலும் வெளியாகவுள்ள இப்படத்தினை கேரள ரசிகர்களும் ஆர்வமுடன் எதிர்பார்த்துள்ளனர்.