கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி இயக்குநர் மணிரத்னம் இயக்கியிருக்கும் ‘பொன்னியின் செல்வன்-1’ திரைப்படம், பெரும் வெற்றியைப் பெற்றிருப்பதுடன் நாவலை வாசித்தவர்கள் மத்தியில் ஆரோக்கியமான விவாதங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது. நாவலை ஆழ்ந்து வாசித்து, அதன் கதாபாத்திரங்களை மனதுக்குள் உள்வாங்கியிருப்பவர்களில் சிலர், அந்தக் கதாபாத்திரங்களைப் போல் உடையணிந்து திரையரங்குக்குச் சென்று ‘பொன்னியின் செல்வன்-1’ படத்தைப் பார்த்து ரசிக்கும் சுவாரசிய நிகழ்வுகளும் அரங்கேறிவருகின்றன.
அந்த வகையில், கும்பகோணம் திரையரங்கம் ஒன்றில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் வந்தியத்தேவன், குந்தவை, நந்தினி, பெரிய பழுவேட்டரையர் போன்ற கதாபாத்திரங்கள் போல் வேடமணிந்து படம் பார்க்க வந்த ரசிகர்கள் கவனம் ஈர்த்தனர்.
செப்டம்பர் 30-ல் வெளியான இப்படம் இதுவரை 325 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்திருப்பது குறிப்பிடத்தக்கது!