’பெண்களின் உணர்வுகளைப் புண்படுத்திவிட்டார்’: பிரபல ஹீரோ மீது போலீஸில் புகார்

’பெண்களின் உணர்வுகளைப் புண்படுத்திவிட்டார்’: பிரபல ஹீரோ மீது போலீஸில் புகார்

நிர்வாணப் புகைப்படங்களை வெளியிட்ட இந்தி நடிகர் மீது போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

பிரபல இந்தி நடிகர் ரன்வீர் சிங். லூட்டேரா, பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத், சிம்பா, கல்லி பாய், 83 உட்பட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகை தீபிகா படுகோனை காதலித்து கடந்த 2018ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

வித்தியாசமான ஆடைகள் அணிவது இவருடைய ஸ்டைல். அதோடு வித்தியாசமான ஹேர்ஸ்டைலுடன் அடிக்கடி போட்டோஷூட் நடத்துவதும் வழக்கம். இந்நிலையில் இதழ் ஒன்றுக்காக, ரன்வீர் சிங் சமீபத்தில் நிர்வாண போட்டோஷூட்டில் பங்கேற்றார்.

இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியது. சர்ச்சையாகவும் இது ஆனது. நடிகர் ரன்வீர் சிங்கின் மனைவி தீபிகா படுகோன், நிர்வாண போட்டோஷூட்டுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.

எம்.பியும் நடிகையுமான மிமி சக்ரவர்த்தி ’’பலரும் ரன்வீரின் புகைப்படங்களை கவர்ச்சியாக இருக்கிறது என்று பாராட்டி இருக்கின்றனர். இந்த போட்டோஷூட்டை ஒரு பெண் ஏற்று நடித்திருந்தால், இதே மாதிரியான பாராட்டு ஒரு பெண்ணுக்கு கிடைக்குமா?’ என்று கேட்டிருந்தார்.

இந்நிலையில், இந்தப் புகைப்படங்களின் மூலம் பெண்களின் உணர்வுகளைப் புண்படுத்திவிட்டதாகக் கூறி மும்பை செம்பூர் போலீஸ் ஸ்டேஷனில் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று, ரன்வீர் சிங் மீது புகார் கொடுத்துள்ளது. புகாரில் அவர்கள் கூறியிருப்பதாவது:

“நாங்கள் குழந்தைகள் மற்றும் விதவைகளின் கல்வியை மேம்படுத்துவதற்காக செயல்படும் தொண்டு நிறுவனம். நடிகர் ரன்வீர் சிங்கின் நிர்வாணப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பார்த்தோம். ஆணும் பெண்ணும் வெட்கப்படும் வகையில் அந்தப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

சிறந்த வரலாறு, பாரம்பரியங்களைக் கொண்ட இந்தியாவில், மக்கள் தங்கள் கலாச்சாரம் மற்றும் மரபுகளைப் பின்பற்றி வாழ்கிறார்கள். பேச்சு சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் போன்றவற்றை எப்போதும் ஆதரிக்கிறோம். ஆனால், அதன் அர்த்தம் சமூகத்தில் நிர்வாணமாக உலவ வேண்டும் என்பதல்ல. இந்திய மக்கள், நடிகர்களைப் பின்பற்றுகிறார்கள். சிலர் அவர்களை கடவுளாகவே வணங்குகிறார்கள். இந்நிலையில் அவர்கள் இப்படி நிர்வாணமாக புகைப்படங்களை எடுக்கலாமா? இந்தப் புகைப்படங்கள் பெண்களின் உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளது. எனவே ரன்வீர் சிங் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் " என்று அந்த புகாரில் கூறியுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in