பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் உடல் தகனம் செய்யப்பட்ட இடத்தில் பொதுமக்கள் இன்று காலை முதல் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்தியாவின் இசைக்குயில் என்று போற்றப்பட்ட பாடகி லதா மங்கேஷ்கர் (92) நேற்று மரணம் அடைந்தார். கரோனா மற்றும் நிமோனியாவால் பாதிக்கப்பட்ட அவர், மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்த அவர், நேற்று மரணமடைந்தார். நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள், இசைக் கலைஞர்கள், ரசிகர்கள் அவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். அண்டை நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை ஆகிய நாடுகளும் லதா மங்கேஷ்கர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தன.
நேற்று மாலை அவர் உடலுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். பின்னர் இரவு 7 மணி அளவில் முப்படைகள் மற்றும் முழு அரசு மரியாதையுடன் லதா மங்கேஷ்கரின் உடல், மும்பை சிவாஜி பார்க் மைதானத்தில் தகனம் செய்யப்பட்டது.
மகாராஷ்டிராவில், லதா மங்கேஷ்கருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சிவாஜி பார்க்கில், லதா மங்கேஷ்கர் தகனம் செய்யப்பட்ட இடத்தில் பொதுமக்கள் இன்று காலை முதல் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அங்கு போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.