``சமூகத்தில், காதல் அத்தனை எளிதல்ல என்பதை ’நட்சத்திரம் நகர்கிறது’ படம் பேசும்'' என்று இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்தார்.
பா.ரஞ்சித் இயக்கத்தில், யாழி ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள படம் 'நட்சத்திரம் நகர்கிறது'. காதலை மாறுபட்ட கோணத்தில் அதன் அரசியலை பேசும் இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா, கலையரசன், டான்ஸிங் ரோஸ் ஷபீர் ஆகியோருடன் ஒரு பெரும் நட்சத்திரக் கூட்டம் இணைந்து நடித்துள்ளனர். டென்மா இசை அமைத்துள்ளார்.
வரும் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா, இயக்குநர்கள் வெற்றிமாறன், சசி, வெங்கட்பிரபு உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இயக்குநர் பா.ரஞ்சித் பேசும்போது, ‘’'ஜெய்பீம்' இந்த ஒரு வார்த்தை தான் என்னை இங்கு கொண்டு வந்து சேர்த்துள்ளது. ’அட்டகத்தி’யில் தொடங்கிய பயணம் ’நட்சத்திரம் நகர்கிறது’ வரை வந்துள்ளது. வெங்கட் பிரபு சாரிடம்தான் கற்றுக்கொண்டேன். ’சென்னை 28’ படம்தான் என் வாழ்வை செதுக்கியது. நாம் நினைத்ததை எடுக்க முடியும் என்பதை கற்றுக்கொடுத்தது. இந்தப்படத்தில் நடித்தவர்கள் அனைவரும் திறமையானவர்கள். அற்புதமாக நடித்துள்ளார்கள். தொழில்நுட்ப கலைஞர்கள் ஒவ்வொருவரும் என்னைப் புரிந்துகொண்டு உழைத்துள்ளார்கள். காதல் சமூகத்தில் அத்தனை எளிதல்ல என்பதை `நட்சத்திரம் நகர்கிறது' படம் பேசும்’’ என்றார்.