நடிகர் திலீப்பை வரும் 18 ஆம் தேதி வரை கைது செய்வதற்கு கேரள உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
பிரபல நடிகை, கடந்த 2017ம் ஆண்டு காரில் கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் மலையாள நடிகர் திலீப், பல்சர் சுனில் உட்பட சிலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் திலீப் ஜாமீனில் வெளியே வந்தார்.
நடிகை பலாத்காரம் செய்யப்பட்டபோது செல்போனில் பதிவு செய்யப்பட்ட காட்சிகள், நடிகர் திலீப்பிடம் கொடுக்கப்பட்டதாகவும் அதை அவர் அதிக சத்தத்துடன் பார்த்தது தனக்குத் தெரியும் என்றும் திலீப்பின் நண்பரும் இயக்குநருமான பாலச்சந்திர குமார் சமீபத்தில் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கை விசாரிக்கும் டிஎஸ்பி பைஜு பவுலோசை கொல்ல, நடிகர் திலீப், அவர் தம்பி அனூப் உட்பட 6 பேர் சதி திட்டம் தீட்டியதாகவும் பாலச்சந்திரகுமார் தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் மீது, ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்தப் புதிய வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டதால், அவர் கேரள உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் இன்று அவரை அவரை கைது செய்ய உயர்நீதிமன்றம் தடை விதித்து, விசாரணையை இன்று (14 ஆம் தேதி) தள்ளி வைத்தது. அதன்படி இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வரும் 18 ஆம் தேதி வரை திலீப்பை கைது செய்வதற்கு தடை விதித்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.