``அந்த பிரபல விமானத்தில் இனி பயணிக்கவே மாட்டேன்'' என்று நடிகை நஸ்ரியா கோபமாகத் தெரிவித்துள்ளார்.
தமிழில், ராஜா ராணி, நய்யாண்டி, வாயைமூடி பேசவும், திருமணம் எனும் நிக்கா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மலையாள நடிகை நஸ்ரியா நாசிம். மலையாள நடிகர் பகத் பாசிலை காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர், இப்போது படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தெலுங்கு நடிகர் நானியுடன் இவர் நடித்த ’அடடே சுந்தரா’ சில மாதங்களுக்கு முன் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
இவர், தாய்லாந்தைச் சேர்ந்த, தாய் ஏர்வேஸ் விமான சேவையை கடுமையாக விமர்சித்து தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சமீபத்தில் இந்த விமானத்தில் பயணம் செய்துள்ள நஸ்ரியா மோசமான அனுபவத்தை எதிர்கொண்டுள்ளார்.
இதுபற்றி அவர், ’தாய் ஏர்வேஸின் சேவை மிகவும் மோசமாக இருக்கிறது. ஒரு விமான நிறுவனத்திடம் இருந்தோ, அதன் பணியாளர்களிடம் இருந்தோ, இதுபோன்ற அனுபவத்தை சந்தித்ததே இல்லை. விமானத்தில் எனது பைகள் காணாமல் போனதால் உதவி கேட்டு சென்றபோது, யாரும் கண்டுகொள்ளவே இல்லை. இனி என் வாழ்நாளில் அந்த நிறுவன விமானங்களில் பயணிக்கவே மாட்டேன்’ என்று அந்த விமான நிறுவனத்தை இணைத்து தெரிவித்துள்ளார்.