`நானியுடன் நடித்தது மகிழ்ச்சியான அனுபவம்’: நஸ்ரியா

`நானியுடன் நடித்தது மகிழ்ச்சியான அனுபவம்’: நஸ்ரியா

’அடடே சுந்தரா’ படத்தில் நானியுடன் நடித்தது மகிழ்வான அனுபவமாக இருந்தது என்று நடிகை நஸ்ரியா தெரிவித்துள்ளார்.

நானி, நஸ்ரியா, நரேஷ், அழகம்பெருமாள், நதியா, ரோகிணி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம், ’அடடே சுந்தரா’. தெலுங்கு இயக்குநர் விவேக் ஆத்ரேயா இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு நகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்துள்ளார். விவேக் சாஹர் இசை அமைத்திருக்கிறார். மைதிரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம், தெலுங்கு, தமிழ், மலையாளம் மொழிகளில் வரும் 10-ம் தேதி வெளியாகிறது.

நஸ்ரியா, நானி
நஸ்ரியா, நானி

நகைச்சுவைக்கும், காதலுக்கும் முக்கியத்துவம் கொடுத்து உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. நடிகர் நானி பேசும்போது, ``ஷ்யாம் சிங்கார ராய் போன்ற ஆக் ஷன் படங்களில் நடித்துவிட்டு, ‘அடடே சுந்தரா’ போன்ற நகைச்சுவையும், காதலும் கலந்த திரைக்கதையில் நடிப்பது பொருத்தமான தேர்வு என நினைக்கிறேன். ரசிகர்களுக்கும் நிச்சயம் இது பிடிக்கும். படத்தின் கதை, மொழி கடந்து அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது. உணர்வுபூர்வமான திரைக்கதை, அனைத்துவித ரசிகர்களையும் கவரும். வரும் 10-ம் தேதி வெளியாகும் இந்தப்படத்தை ரசிகர்கள் எப்படி வரவேற்பார்கள் என்று ஆவலுடன் காத்திருக்கிறோம்'' என்றார்.

படத்தின் நாயகி நஸ்ரியா பேசுகையில், ``இந்தப் படத்தில் நானியுடன் இணைந்து பணியாற்றியது மகிழ்வான அனுபவமாக இருந்தது. காதல் கதைக்கு ஊக்கமும், ஆதரவும் அளித்து வரும் தமிழ் ரசிகர்கள் ‘அடடே சுந்தரா’ படத்திற்கும் ஆதரவு வழங்க வேண்டும். பொழுதுபோக்கு அம்சங்களுடன் காதலும் நகைச்சுவையும் கலந்து உருவாகியிருக்கும் இந்தப் படம் ரசிகர்களுக்கு ஜாலியான அனுபவத்தைக் கொடுக்கும்'' என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in