நடிகை நயன்தாரா நடித்த 'கனெக்ட்' படத்தின் ப்ரீமியர் ஷோவில் தன்னை பவுன்சர்கள் மோசமாக நடத்தியதுடன், தூரம் போன எனத் துரத்தி விட்டார்கள் என யூடியூப் பிரபலம் ஜி.பி.முத்து குற்றம் சாட்டியுள்ளார்.
'நண்பர்களே' என்ற சொல் மூலம் டிக்டாக்கில் பிரபலமானவர் ஜி.பி.முத்து. இவர் வெளியிட்ட வீடியோக்களுக்கு இந்தியா முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் யூடியூப் சேனலில் தனது வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து பங்கேற்றார். ஆனால், 20 நாட்களிலேயே தனது குடும்பத்தினரைப் பார்க்க வேண்டும் என்று போட்டியில் இருந்து வெளியேறி விட்டார்.
இதன் பின் திரைப்படங்களில் நடித்து வருகிறார். நடிகை நயன்தாரா நடித்துள்ளன 'கனெக்ட்' படத்தின் ப்ரீமியர் ஷோவுக்கு ஜி.பி. முத்துவை அழைத்திருந்தனர்.
இந்த நிகழ்ச்சிக்குச் சென்றது குறித்து ஜி.பி.முத்து செய்தியாளர்களிடம் கூறுகையில், "நடிகை நயன்தாரா உங்களுடன் படம் பார்க்க விரும்புகிறார் என சொன்னார்கள். அதை நம்பி போனால் என்னை ஒரு மூலையில் உட்கார வைத்துவிட்டார்கள். அதன் பின் பவுன்சர்கள் என்னை மிகவும் மோசமாக நடத்தினர். தூரம் போ என துரத்தி விட்டார்கள். இதனால் பாதியில் நான் வெளியேறிவிட்டேன். அதற்குப் பிறகு நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன், என்னை போன் செய்து மீண்டும் வர சொன்னார். இன்னொரு நாள் பார்க்கலாம் என நான் கூறிவிட்டேன்" என ஜி.பி.முத்து கூறியுள்ளார். தற்போது இவரது இந்த பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.