
நடிகை நயன்தாராவின் 75-வது படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவருக்கும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஜூன் 9-ம் தேதி திருமணம் நடந்தது. இருவரும் ஹனிமூனுக்கு தாய்லாந்து சென்றனர். சமீபத்தில் சென்னை திரும்பிய நயன்தாரா, அட்லீ இயக்கும் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து, அவருடைய 75-வது படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
இந்தப் படத்தை ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய நிலேஷ் கிருஷ்ணா இயக்குகிறார். ஜீ ஸ்டூடியோஸ், டிரைடன்ட் ஆர்ட்ஸ், நாட் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன. இதன் தொடக்கவிழா சென்னையில் இன்று நடந்தது.
படம்பற்றி நிலேஷ் கிருஷ்ணா கூறும்போது, ’’நாயகியை மையமாக கொண்ட கதை இது. இதில் நயன்தாரா நடிக்க ஒப்புக்கொண்டதில் மகிழ்ச்சி . இது அவருக்கு 75-வது படம் என்பதால், அவர் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்றுவதில் கவனத்துடன் இருக்கிறோம். படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது’’ என்றார்.
இந்தப் படத்தில் சத்யராஜ், ஜெய், ரெடின் கிங்ஸ்லி முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார்.