
நடிகை நயன்தாரா சினிமா நடிப்பிலிருந்து இனி விலக போவதாக ஷாக்கிங் தகவல் வெளியாகி உள்ளது. தனது குழந்தைகளை கவனித்துக் கொள்வதற்காக அவர் இந்த முடிவினை எடுத்துள்ளார் என சொல்லப்படுகிறது.
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக உள்ளவர் நயன்தாரா. 2005ம் ஆண்டு 'ஐயா' திரைப்படம் மூலமாக தமிழ்த் திரையுலகில் அடியெடுத்து வைத்த நயன்தாரா, கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக கோலிவுட்டின் அசைக்க முடியாத முன்னணி நடிகையாக உள்ளார். ரஜினி, விஜய், அஜித், சிம்பு, தனுஷ் என அனைத்து நடிகர்களுடனும் இணைத்து மாஸ் ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார் நயன்தாரா.
சில ஆண்டுகளாக இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து வந்த நயன்தாரா, கடந்த ஆண்டு ஜூன் மாதம் அவரை வெகு விமரிசையாக மகாபலிபுரத்தில் திருமணம் செய்துகொண்டார். திருமணம் ஆனாலும் வெகு பிஸியாக திரைப்படங்களிலும் அவர் நடித்து வருகிறார். இந்த சூழலில்தான் கடந்த அக்டோபர் 9ம் தேதி தனக்கு வாடகைத்தாய் மூலமாக இரட்டை ஆண் குழந்தை பிறந்ததாக அறிவித்து பரபரப்பை கிளப்பினார் அவர்.
தற்போது நயன்தாரா, தனது இரட்டை குழந்தைகளை பார்த்துக்கொள்வதற்காக சினிமாவிலிருந்து விலகும் முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் இப்போது பாலிவுட்டில் ஷாருக்கானின் 'ஜவான்', பெயரிடப்படாத நயன்தாராவின் 75வது படம் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். எனவே, கைவசம் உள்ள படங்களை முடித்துவிட்டு, இனி அவர் தயாரிப்பில் மட்டுமே கவனம் செலுத்த முடிவு எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.