விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதிக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்திருக்கின்றன. இன்ஸ்டாகிராம், ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைதளப் பக்கங்களில் இதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்திருக்கிறார் விக்னேஷ் சிவன்.
விக்னேஷ் சிவன் ‘நானும் ரவுடிதான்’ எனும் படத்தை இயக்கி இருந்தார். விஜய் சேதுபதி நாயகனாக நடித்த இந்தப் படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்திருந்தார். அப்போதுதான் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. இருவரும் கடந்த 6 ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் காதலித்துவந்தனர்.
கடந்த ஜூன் 9-ம் தேதி இருவருக்கும் திருமணம் முடிந்தது. இந்நிலையில் இன்று இயக்குநர் விக்னேஷ் சிவன் தன் சமூகவலைதளப் பக்கங்களில், ‘நானும், நயன்தாராவும் அம்மா - அப்பா ஆகிவிட்டோம். இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன. முன்னோர்களின் ஆசீர்வாதம், பிரார்த்தனை ஒருங்கிணைந்து இரட்டைக் குழந்தைகளின் வடிவத்தில் எங்களுக்குக் கிடைத்துள்ளன. உங்கள் அனைவரின் ஆசிர்வாதமும் வேண்டும். உயிர் மற்றும் உலகம்’ எனப் பதிவிட்டுள்ளார்.
இரு பிஞ்சுக் குழந்தைகளின் கால்களுக்கு தம்பதி சகிதம் முத்தம் கொடுக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இவர்கள் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.