``போதை பார்ட்டிக்கும் என் மகளுக்கும் தொடர்பில்லை'' என்று பிரபல நடிகர் நாகபாபு தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத் பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் போதை பொருட்களை பயன்படுத்தி, நள்ளிரவு பார்ட்டி நடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸார், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அங்கு அதிரடியாக நுழைந்து சோதனை செய்தனர்.
அப்போது, 90 இளைஞர்கள், 38 இளம் பெண்கள் மற்றும் பப் ஊழியர்கள் உள்பட சுமார் 150 பேர் சிக்கினர். அனைவரும் தொழிலதிபர்கள், சினிமா மற்றும் அரசியல் பிரமுகர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் அதிக அளவில் போதைப் பொருள் பயன்படுத்தி இருந்ததாகக் கூறப்படுகிறது.
அதில் நடிகர் சிரஞ்சீவின் சகோதரர் நடிகர் நாகபாபுவின் மகளும் நடிகையுமான நிஹாரிகாவும் ஒருவர். இவர் தமிழில், ’ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தில் நடித்துள்ளார். பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து கோக்கைன் உள்ளிட்ட போதைப் பொருட்களும் கைப்பற்றப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நடிகை நிஹாரிகா குறித்து சமூக வலைதளங்களில் தவறாக செய்தி பரப்ப வேண்டாம் என்று அவர் தந்தையும் நடிகருமான நாக பாபு கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், அனுமதிக்கப் பட்ட நேரத்தை விட அதிகமாக அந்த நட்சத்திர ஓட்டலின் பப் இயங்கியதால் போலீசார் சோதனை செய்தனர். அங்கு நிஹாரிகாவும் இருந்தார். அவ்வளவுதான். அவருக்கும் போதை பார்ட்டிக்கும் சம்மந்தமில்லை. இதை போலீசாரே தெரிவித்துள்ளனர் என்றார்.