`` ’சில்ட்ரன் ஆஃப் ஹெவன்’ போன்று தமிழில் ஏன் படங்கள் எடுப்பதில்லை என்ற வருத்தம் இருந்தது'' என இளையராஜா தெரிவித்துள்ளார்.
’மிருகம்’, ’உயிர்’, ’சிந்து சமவெளி’, ’கங்காரு’ உட்பட சில படங்களை இயக்கியவர் சாமி. இவர், உலகப்புகழ் பெற்ற ஈரானிய திரைப் படமான ’சில்ரன் ஆஃப் ஹெவன்’ படத்தின் உரிமையை பெற்று தமிழில் ’அக்கா குருவி’ என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார். இதற்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். மாஹின், டாவியா, தாரா ஜெகதாம்பா, செந்தில்குமார் உட்பட பலர் நடித்துள்ளனர்.
மதுரை முத்து மூவிஸ், கனவு தொழிற்சாலை இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தை பிவிஆர் பிக்சர்ஸ் வெளியிடுகிறது.
மே மாதம் 6-ம் தேதி வெளியாகும் இந்தப் படம் பற்றி இளையராஜா கூறுகையில், ``உலக சினிமாக்களைப் பார்ப்பதில் எனக்கு ஆர்வம் இருக்கும். அப்படி ’சில்ட்ரன் ஆஃப் ஹெவன்’ படம் பார்த்த போது ஆச்சரியமாக இருந்தது. ஒரு சிறு ஷூவை வைத்து கொண்டு, சிறு குழந்தைகளின் உலகத்தை, சின்ன பிரச்சினையை, அவர்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்பதை தத்ரூபமாக, அற்புதமான சினிமாவாக தந்துள்ளார்களே என ஆச்சரியமாக இருந்தது. நம் தமிழ்நாட்டில் ஏன் இப்படி படங்கள் எடுப்பதில்லை, ஏன் வருவதில்லை என வருத்தமாக இருந்தது.
ஒரு கலைஞனுக்கு உயர்வான சிந்தனை தோன்றினால் தான் உயர்வான ஒன்றை உருவாக்க முடியும். இப்படி படம் எடுக்க முடியும். அது, நம் இயக்குநர்களிடம் இல்லை. ஆனால் இயக்குநர் சாமி அதே படத்தை, நம் ஊருக்கு தகுந்தவாறு கதையை மாற்றி, சுவாரஸ்யமாக அருமையாக எடுத்திருக்கிறார். நல்ல படைப்புகள் வர வேண்டும். இந்தப்படங்களை பொதுமக்கள் ஊக்குவிக்க வேண்டும். இது மாதிரி படங்கள் ஜெயிக்க வேண்டும். மக்களின் ரசனை வளர வேண்டும்'' என்றார்.