அரசு மரியாதையுடன் லதா மங்கேஷ்கரின் உடல் தகனம்
மறைந்த பாடகி லதா மங்கேஷ்கரின் உடல் முழு அரசு மரியாதையுடன் மும்பை சிவாஜி பூங்காவில் தகனம் செய்யப்பட்டது.
மறைந்த பாடகி லதா மங்கேஷ்கரின் உடல், ராணுவ வாகனத்தில் வைத்து இறுதி சடங்கிற்காக சிவாஜி பார்க் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டு இசை குயிலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். மும்பை சிவாஜி பூங்காவில் வைக்கப்பட்டு இருந்த லதா மங்கேஷ்கர் உடலுக்கு பிரதமர் மோடி, மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே உள்பட பல தலைவர்கள் மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், மும்பை சிவாஜி பூங்காவில் வைக்கப்பட்ட லதா மங்கேஷ்கர் உடலுக்கு முப்படை வீரர்கள் மற்றும் காவல்துறையினர் இறுதி மரியாதை செலுத்தினர். துப்பாக்கிக் குண்டுகள் முழங்க அவரது உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் லதா மங்கேஷ்கரின் உடலில் போர்த்தப்பட்ட தேசியக்கொடி குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து மும்பை சிவாஜி பூங்காவில் முப்படை, மாநில காவல்துறை மரியாதையுடன் லதா மங்கேஷ்கரின் உடல் தகனம் செய்யப்பட்டது.