`இதுக்கு மேல என்ன கேட்கமுடியும்?’- வைரலாகும் நயன்தாராவின் புதிய திருமண புகைப்படங்கள்
தங்கள் திருமணத்தின்போது ரஜினிகாந்த், ஷாருக்கான் ஆகியோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார்.
நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் கடந்த ஆறு வருடங்களாகக் காதலித்து வந்தனர். இவர்கள் திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில் ஜூன் மாதம் 9-ம் தேதி கோலாகலமாக நடந்தது. இந்தத் திருமணத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரபல இந்தி நடிகர் ஷாருக் கான், இயக்குநர்கள் மணிரத்னம், அட்லீ, தயாரிப்பாளர் போனி கபூர், நடிகர்கள் சூர்யா, கார்த்தி உட்பட திரையுலகினர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
திருமணத்துக்குப் பின்னர் இருவரும் ஹனிமூனுக்காக தாய்லாந்து சென்றனர். அங்கிருக்கும் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் வெளியிட்டிருந்தார். பின்னர் சென்னை திரும்பிய நயன்தாரா, ஜவான் படப்பிடிப்பில் பங்கேற்றார்.
இந்நிலையில் திருமணம் முடிந்து ஒரு மாதம் ஆன நிலையில், ’சில சிறந்த தருணங்களைப் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி’ என்று குறிப்பிட்டு திருமணத்தின்போது ஷாருக்கான், ரஜினிகாந்த் ஆகியோருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார். அதில் ஷாருக்கான் நயன் தாராவைக் கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த், நயன்தாராவின் கையைப் பிடித்து வாழ்த்துக் கூறியுள்ளார்.
ஷாருக்கானுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, ’’இதற்கு மேல் என்ன கேட்க முடியும்? எங்கள் திருமணத்தின் போது கனிவான, அழகான, அற்புதமான இந்த மனிதர் எங்களுடன் இருந்தது பாக்கியம்’’ என்று தெரிவித்துள்ளார்.