5 மொழிகளில் `பொன்னியின் செல்வன்’: லைகா வெளியிட்ட அப்டேட்

5 மொழிகளில் `பொன்னியின் செல்வன்’: லைகா வெளியிட்ட அப்டேட்

மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்' படம் ஐந்து மொழிகளில் வெளியாக இருப்பதாக லைகா அறிவித்துள்ளது.

கல்கி கிருஷ்ணமூர்த்தியின் புகழ்பெற்ற ’பொன்னியின் செல்வன்’ நாவலை, இயக்குநர் மணிரத்னம் படமாக்கி இருக்கிறார். இதில் கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம், விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன் உள்பட பலர் நடித்துள்ளனர். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ள இந்தப் படத்தை லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. இரண்டு பாகங்களாக இந்தப் படம் வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டை சோழர்கள் ஆண்ட தஞ்சாவூரில் நடத்த படக்குழு முடிவு செய்திருந்தது. பின்னர் அந்த முடிவு மாற்றப்பட்டுள்ளது. ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30-ம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்நிலையில், ’வருகிறான் சோழன்’ என்ற தலைப்புடன் ’பொன்னியின் செல்வன்’ படத்தின் புரமோஷன் வீடியோ வெளியாகி இருக்கிறது. அதில் இந்தப் படம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in