
'நெஞ்சுக்கு நீதி' படத்தை இளைஞர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் இலவசமாக பார்க்க வேண்டும் என்பதற்காக ஒரு ஷோவை முழுமையாக முன்பதிவு செய்துள்ளார் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர்.
பாலிவுட்டில் வெற்றிப் படமான 'ஆர்ட்டிக்கள் 15' என்ற திரைப்படத்தை 'நெஞ்சுக்கு நீதி' என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. போனி கபூர் தயாரிப்பில், அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடித்த இந்த திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் உதயநிதி ஸ்டாலினுடன், தான்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர், சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்நிலையில், 'நெஞ்சுக்கு நீதி' படத்தை இளைஞர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் இலவசமாக பார்க்க வேண்டும் என்பதற்காக முன்னாள் அமைச்சரும், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினருமான தமிழரசி ரவிக்குமார், படம் வெளியாகும் முன்பே மானாமதுரையில் உள்ள திரையரங்கின் ஒரு ஷோவிற்கான அனைத்து டிக்கெட்டுக்களையும் முன்பதிவு செய்துள்ளார்.
மேலும், "இளைய சூரியன் நடிப்பில் சமூக அக்கறையுடன் உருவாகி உள்ள 'நெஞ்சுக்கு நீதி' திரைப்படம் இளைஞர்கள் மற்றும் கழக தோழர்களுக்கு இலவசம்" என்று குறிப்பிட்டு, தொடர்பு கொள்வதற்காக கைப்பேசி எண்ணையும் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மற்றும் படத்திற்கு வாழ்த்து தெரிவித்து ஒட்டப்பட்ட போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஏற்கனவே, இதே போன்று கல்லூரி மாணவ- மாணவிகள் மற்றும் இளைஞர்களுக்கு இலவசமாக இப்படத்தினை காட்சிப்படுத்த இலவச டிக்கெட் கொடுக்க உள்ளதாக கூறி மதுரையை சேர்ந்த திமுக பிரமுகர் எஸ்.பாலா சோஷியல் மீடியாவில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.