`விஞ்ஞானி நம்பி நாராயணன் சொன்ன தகவல் என்னை ஆச்சரியப்படுத்தியது'- `ராக்கெட்ரி' படம் குறித்து மாதவன்!

`விஞ்ஞானி நம்பி நாராயணன் சொன்ன தகவல் என்னை ஆச்சரியப்படுத்தியது'- `ராக்கெட்ரி' படம் குறித்து மாதவன்!

ராக்கெட்ரி படத்தில் வயதான தோற்றத்துக்கு மாற, தனது பற்களை மறு சீரமைத்ததாக நடிகர் மாதவன் கூறினார்.

நடிகர் மாதவன் இயக்குநராக அறிமுகமாகும் பான் இந்தியன் திரைப்படம் ‘ராக்கெட்ரி: தி நம்பி விளைவு’. இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் நம்பி நாராயணனாக மாதவன் நடித்துள்ளார். மற்றும் சிம்ரன் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் ஜூலை 1-ம் தேதி வெளியாக உள்ளது. தமிழில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது.

படம் பற்றி நடிகர் மாதவன் கூறுகையில். `` ’விக்ரம் வேதா’ முடிந்ததும், இஸ்ரோ விஞ்ஞானியின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை வைத்து திரைப்படம் எடுக்கக் கூறி எனது நண்பர் பரிந்துரைத்தார். பாகிஸ்தானுக்கு ராக்கெட் ரகசியத்தை தெரிவித்ததாக பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு, சிறையில் சித்ரவதை செய்யப்பட்ட அந்த விஞ்ஞானி, உச்ச நீதிமன்றத்தின் மூலம் தான் குற்றமற்றவர் என்பதை நிரூபித்தார். இதுதான் கதை. ஜேம்ஸ் பாண்ட் பாணி கதையாக இருக்கிறதே என்ற எண்ணத்தில், இந்த கதையை எடுக்க உற்சாகமானேன். நான் நம்பி நாராயணனைச் சந்தித்தபோது என் வாழ்க்கையே மாறியது.

அவர் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை நினைவுகூரத் தொடங்கியபோது, அவர் கிட்டத்தட்ட கொந்தளித்தார். நான் அவரை சமாதானப்படுத்த விரும்பினேன். “அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் நீங்கள் விடுவிக்கப்பட்டீர்கள். இப்போது கவலைப்பட ஒன்றுமில்லை’ என்று சொன்னேன். ஆனால் அவர், "நான் குற்றமற்றவன் என்று நீதிமன்றத்தால் நிரூபிக்கப்பட்டு விட்டது. ஆனால் எனது பெயரை கூகுள் செய்து பாருங்கள், அதில் 'ஸ்பை' என குறியிடப்பட்டிருப்பதை காண்பீர்கள். எனது குடும்பமும் அப்படி முத்திரை குத்தப்பட்டுள்ளது. அது மீள முடியாததாகவே உள்ளது’ என்றார். அது தான் எனக்கு ஸ்கிரிப்ட் எழுதும் ஆர்வத்தை உடனடியாக ஏற்படுத்தியது.

ஏழு மாதங்களுக்குப் பிறகு, திரைக்கதையோடு அவரைச் சந்திக்க சென்றேன். அப்போது அவருடைய மற்றொரு அதிர்ச்சியூட்டும் தகவலினால் ஆச்சரியமடைந்தேன். அவர் தனது சாதனைகளைப் பற்றிப் பேச ஆரம்பித்தார், அது என்னை வியப்பில் ஆழ்த்தியது. ஒரு கட்டத்தில், அவர் பேசும் போது குறுக்கிட்டு, “இதெல்லாம் உண்மையா?” என்று ஆச்சரியமாகக் கேட்டேன்.

நாட்டில் தேசபக்தி உள்ளவர்களில் இரண்டு பிரிவுகள் இருக்கிறார்கள். ஒருவர், தேசபக்தியை முழக்கமிட்டு, வெளிப் படுத்துகிறார், பரப்புகிறார், மற்றவர்கள், எழுதப்படாத மற்றும் யாராலும் அறியப்படாத சாதனை செய்த ஹீரோக்களாக இருக்கிறார்கள். நம்பி நாராயணன் போன்றவர்களின் வாழ்க்கையைப் பற்றி தேசமும் உலகமும் அறிய வேண்டும் என்று விரும்பினேன்.

அவர் தமிழர் என்பது நம்மில் பலருக்குத் தெரியாது என்பதும், நாட்டின் முன்னேற்றத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு மிகவும் மகத்தானது என்பதும், பொதுமக்களின் பார்வையில் படாமல் இருப்பதும் ஏமாற்றமாக இருந்தது. அதனால்தான் ‘ராக்கெட்ரி’ படத்தைத் தயாரிக்க முடிவு செய்தேன்'' என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in