கரோனா தொற்றும் மற்றும் நிமோனியா காய்ச்சலால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலுக்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்டவர்கள் இரங்கல் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், ஒரு நாள் கழித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று இரங்கல் தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்தியாவின் இசைக்குயில், பல கோடி மக்களை தன் காந்த குரலால் கவர்ந்த பாரத ரத்னா லதா மங்கேஷ்கர் அவர்களின் மறைவு மிகுந்த மனவேதனை அளிக்கிறது. அவரின் ஆன்மா இளைப்பாற இறைவனை வேண்டுகிறேன். அவர் உடலால் மறைந்தாலும் தனது பாடல்களால் பூமி உள்ளளவும் வாழ்வார்" என தெரிவித்துள்ளார்.