சுயநினைவை இழந்த பழம்பெரும் நடிகை!

கே.பி.ஏ.சி.லலிதா
கே.பி.ஏ.சி.லலிதா

உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சைப் பெற்று வந்த பழம்பெரும் நடிகை கே.பி.ஏ.சி.லலிதா, சுய நினைவை இழந்துவிட்டதாகக் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

பிரபல மலையாள குணசித்திர நடிகையான கே.பி.ஏ.சி.லலிதா, தமிழில், ’காதலுக்கு மரியாதை’, ‘அலைபாயுதே’, ‘உள்ளம் கேட்குமே’, ‘கிரீடம்’, ‘காற்று வெளியிடை’ உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

சுமார் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள கே.பி.ஏ.சி.லலிதா, இயக்குநர் பரதனின் மனைவி. சிறந்த துணை நடிகைக்காக, 2 முறை தேசிய விருதுகளை லலிதா பெற்றுள்ளார். நான்கு மாநில திரைப்பட விருதுகளையும் பெற்றுள்ளார். நடிகரும் இயக்குநருமான சித்தார்த், பரதன் - லலிதா தம்பதியின் மகன் ஆவார்.

73 வயதான லலிதா, கல்லீரல் பிரச்சினை காரணமாக கடந்த வருடம் அக்டோபர் மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

சிகிச்சை முடிந்து தனது சொந்த வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்று அவர் விரும்பியதை அடுத்து, திருமணத்துக்குப் பிறகு தனது கணவருடன் வாழ்ந்த வடக்கன்சேரி என்கக்காட்டில் உள்ள வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

மும்பையில் இருந்து வந்திருந்த அவர் மகள் ஸ்ரீகுட்டி, மகன் சித்தார்த்; அவரது மனைவி ஆகியோர் லலிதாவைக் கவனித்துக்கொண்டனர். ஆனால், அவர் திடீரென தனது சுய நினைவை இழந்தார். யாரையும் அவரால் அடையாளம் காணவோ பேசவோ முடியவில்லை. இதையடுத்து சித்தார்த்தின் கொச்சி திருப்புனித்துறை வீட்டுக்கு லலிதா அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்.

பிரபல நடிகை சுய நினைவை இழந்தது மலையாளத் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in