இயக்குநர் பிரபு சாலமன் ஹீரோ, ஹீரோயின் இல்லாத படத்தை இயக்கி இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
கொக்கி, மைனா, கும்கி, கயல் உட்பட பல படங்களை இயக்கிய பிரபு சாலமன், கடைசியாக ’காடன்’ படத்தை இயக்கி இருந்தார். இதில் ராணா, விஷ்ணு விஷால் உட்பட பலர் நடித்திருந்தனர். பான் இந்தியா படமாக இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவான இந்தப் படத்தை ஈராஸ் இன்டர்நேஷனல் தயாரித்திருந்தது. இதை அடுத்து அவர், 'கும்கி 2' படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்போது புதிய படம் ஒன்றை இயக்கியுள்ளார்.
இதில், ’குக் வித் கோமாளி’ அஸ்வின் குமார், தம்பி ராமையா, கோவை சரளா உட்பட பலர் நடித்துள்ளார். காமெடியாக பார்த்த கோவை சரளா, இதில் சீரியஸ் கேரக்டரில் நடித்துள்ளார். நிவாஸ் கே பிரசன்னா இசை அமைக்கும் இந்தப் படத்துக்கு ஜீவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இதில் ஹீரோ, ஹீரோயின் என்று யாரும் இல்லை. படத்துக்கு ’செம்பி’ என்று டைட்டில் வைத்துள்ளனர். இதன் கதையை சொல்ல முடியாது, பார்க்க மட்டுமே முடியும் என்று பிரபு சாலமன் தெரிவித்துள்ளார். கொடைக்கானல் பகுதிகளில் இதன் படப்பிடிப்பு முடிந்துள்ளது.