பிரசாந்த் நீல் இயக்கியுள்ள 'கே.ஜி.எஃப்: சாப்டர் 2’ படத்தில், யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ் உள்பட பலர் நடித்துள்ளனர். கடந்த மாதம் 14-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட மொழிகளில் இந்தப் படம் வெளியானது. உலகம் முழுவதும் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இந்தப் படத்தின் மூன்றாம் பாகம் வெளியாக இருப்பதாகவும் அதற்கான ஆரம்பக் கட்டப் பணிகள் தொடங்கி இருப்பதாகவும் கடந்த சில நாட்களுக்கு முன் அதன் தயாரிப்பாளர் விஜய் கிரகாந்துர் கூறியிருந்தார். நடிகர் ராணா டக்குபதி, இதில் வில்லனாக நடிக்க இருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாயின.
இதற்கிடையே, ‘கேஜிஎஃப்-3’ படத்தின் பணிகள் டிசம்பர் மாதம் தொடங்க இருப்பதாகக் கூறப்பட்டது. இயக்குநர் பிரசாந்த் நீல் இப்போது இயக்கும் ‘சலார்’ படத்தின் ஷூட்டிங் நவம்பர் மாதம் முடிவடையும் என்றும் டிசம்பர் மாதம் ‘கேஜிஎஃப்-3’ படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில், இப்படத்தை உடனடியாகத் தொடங்கும் எண்ணமில்லை என்று ஹோம்பாளே பிலிம்ஸின் நிர்வாகத் தயாரிப்பாளர் கார்த்திக் கவுடா கூறியிருக்கிறார். “இது தொடர்பாக வெளிவரும் செய்திகள் அனைத்தும் ஊகங்களே. இப்போது சிறந்த புரொஜக்ட்களை தொடங்க இருப்பதால், உடனடியாக ‘கேஜிஎஃப்-3’ படத்தை ஆரம்பிக்கும் எண்ணமில்லை. தொடங்கும்போது அதுபற்றி அறிவிப்போம்’’ என்று அவர் தெரிவித்துள்ளார்.