‘நடிகர் திலீப், தனது 6 செல்போன்களையும் வரும் திங்கட்கிழமைக்குள் சமர்பிக்க வேண்டும்’ என்று கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகை கடத்தல் விவகாரத்தில், விசாரணை அதிகாரியை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாகத் தொடரப்பட்ட வழக்கில், நடிகர் திலீப் மற்றும் அவர் உறவினர்கள் உட்பட 6 பேரிடம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் அவசர மனுவை கேரள உயர் நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்த குற்றப்பிரிவு போலீஸார், விசாரணைக்கு நடிகர் திலீப் ஒத்துழைக்கவில்லை என்றும் செல்போன்களை தர அவர் மறுத்துவிட்டதாகவும் தெரிவித்தனர்.
விசாரணைக்கு நடிகர் திலீப் ஒத்துழைப்பு அளிக்காவிட்டால், அவருடைய முன்ஜாமீன் நிராகரிக்கப்படும் என்பதை நினைவுபடுத்துவதாக நீதிமன்றம் எச்சரித்தது. பின்னர் தொலைபேசியை சமர்ப்பிக்க அவர் ஏன் பயப்படுகிறார் என்றும் கேள்வி எழுப்பியது.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. நடிகர் திலீப், போலீஸாரிடம் சாட்சியத்தை வழங்க மறுப்பதை சதி திட்டத்தின் ஒரு பகுதியாகவே பார்க்க முடியும் என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. மேலும் திலீப் தரப்பில் அவர் வழக்கறிஞர் முன்வைத்த வாதங்களை நிராகரித்த நீதிமன்றம், வரும் திங்கட்கிழமை காலை 10 மணிக்குள் உயர் நீதிமன்ற பதிவாளரிடம் அவருடைய 6 செல்போன்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.