
அரசியலில் அடிவாங்கிய மெகா ஸ்டார் சிரஞ்சீவி, நமது களம் சினிமாதான் என்பதைப் புரிந்துகொண்டு தற்போது ரஜினி வழியில் ஆண்டுக்கு 2 படங்களில் நடித்து வருகிறார். தற்போது அவரது நடிப்பில் 'போலா சங்கர்' திரைப்படம் ஆகஸ்ட் 11-ல் ஆந்திராவிலும் தெலங்கானாவிலும் வெளியாகியுள்ளது.
இயக்குநர் மெஹர் ரமேஷ் இயக்கியுள்ள இந்தப் படம், கடந்த 2015-ல் அஜித் நடிப்பில் வெளியான ‘வேதாளம்’ படத்தின் ரீமேக். இதில் சிரஞ்சீவியின் தங்கையாக கீர்த்தி சுரேஷும் ஜோடியாக ‘காவாலா’ பாடலுக்காக தாய்குலத்தால் ‘தரமாக’ அர்ச்சிக்கப்படும் தமன்னாவும் நடித்துள்ளனர்.
தற்போது தெலுங்குப் படவுலகில் நம்பர் ஒன் இடத்தில் ராஷ்மிகா மந்தனாவும் அடுத்த இடத்தில் சமந்தாவும் மூன்றாம் இடத்தில் கீர்த்தி சுரேஷும் உள்ளனர். இவர்களில் ராஷ்மிகா ஒரு படத்துக்கு 35 நாள் கால்ஷீட்டுக்கு 2.25 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறாராம். இரண்டாம் இடத்தில் இருக்கும் சமந்தா 2.10 கோடி சம்பளம் வாங்குவதாகவும் கீர்த்தி சுரேஷ் 1.80 கோடி சம்பளம் வாங்குவதாகவும் நம்பகமான தெலுங்குத் திரையுலக ‘ஆர்ட்டிஸ்ட் மேனஜர்கள்’ நமக்குத் தகவல் தருகின்றனர்.
மார்க்கெட் நிலவரம் இப்படி இருக்க, சிரஞ்ஜீவியுடன் முதல் முறையாக அவருக்குத் தங்கையாக நடித்துள்ள கீர்த்தி சுரேஷ், இவருக்கு ‘போலா சங்கர்’ படத்துக்கு 1 கோடியே 75 லட்சம் சம்பளம் என்கிறார்கள். அங்கே அவர் கதாநாயகியாக நடிக்கும் சம்பளத்தைவிட இது 5 லட்சம் மட்டுமே குறைவு.
இப்படத்தில் ஹீரோயினான நடித்துள்ள தமன்னாவுக்கே 1 கோடியே 10 லட்சம் தான் சம்பளம் என்கிறார்கள். ‘அண்ணாத்தே’ படத்தின் வசூல் 175 கோடி. அந்தப் படத்துக்கு ரஜினியின் சம்பளம் 75 கோடி என்று அப்போது பேச்சு அடிபட்டது.
‘அண்ணாத்தே’ வெற்றியால், ‘போலா சங்கர்’ படத்தில் கீர்த்தி சுரேஷையே தனக்கு தங்கையாகப் போடும்படி சிரஞ்ஜீவி கேட்டுகொண்டாராம். அப்படியெல்லாம் இருந்தும் ‘போலா சங்கர்’ சிரஞ்ஜீவியின் ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தைக் கொடுத்துவிட்டது என்கிறார்கள் விமர்சகர்கள்.
2015-ல் வெளியான ‘வேதாளம்’ படத்தை தற்போதைய டிரெண்டுக்கு ஏற்ப மாற்றாமல் விட்டதால் இந்த ஏமாற்றம் என்கிறார்கள். கீர்த்தி சுரேஷ் சென்டிமென்ட் கைகொடுக்கும் என்று எதிர்பார்த்த சிரஞ்ஜீவிக்கு அதுவும் வொர்க் அவுட் ஆகவில்லை என்பதுதான் இப்போதைய நிலவரம் என்கிறார்கள்.