
தனது இயக்கத்தில் ரஜினி-கமல் நடித்திருப்பது போன்ற போஸ்டர் ஒன்றை கார்த்திக் சுப்பாராஜ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் நடிகர்கள் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘ஜிகர்தண்டா-டபுள் எக்ஸ்’. தீபாவளி விடுமுறையை ஒட்டி இந்த வாரம் படம் வெளியாக இருக்கிறது. நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான கார்த்திக் சுப்பாராஜ், ரஜினி நடித்த ஒரு படத்தின் தாக்கத்தில்தான் 'ஜிகர்தண்டா 2' படத்தின் கதையை எழுதியதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.
கடந்த 1975ம் ஆண்டு ‘அபூர்வ ராகங்கள்’ என்ற படத்தின் மூலமாக நடிகர் ரஜினிகாந்த் திரையில் அறிமுகமானார். இதைக் குறிப்பிட்டு, “தமிழ் சினிமாவில் முதல் கருப்பு ஹீரோ அறிமுகமான ஆண்டை எனது கருப்பு ஹீரோ கதாபாத்திரத்திற்குப் பயன்படுத்திக் கொண்டேன். அங்கிருந்துதான் இந்தப் படத்தின் கதை தொடங்கியது” எனக் கூறினார்.
இதுமட்டுமல்லாது, தனது உதவி இயக்குநர்களிடம், “இதற்கு முந்தைய காலக்கட்டத்தில் பிறந்திருந்தால் இந்த ‘ஜிகர்தண்டா2’ படத்தை ரஜினி, கமல் வைத்து எடுத்திருப்பேன் எனக் கூறியிருந்தேன். அதை என் உதவி இயக்குநர்கள் சீரியஸாக எடுத்துக் கொண்டு அவர்கள் இந்தப் படத்தில் இருக்கும்படியான போஸ்டர் ஒன்றை உருவாக்கி உள்ளார்கள்” எனக் கூறியுள்ளார்.