பிரபல இயக்குநரை கடத்திப்பணம் பறிக்க, பிரபல தாதா கும்பல் திட்டமிட்டிருந்தது, போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பிரபல பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, சிறையில் இருக்கும் தாதா லாரன்ஸ் பிஷ்னோயை காவலில் எடுத்து போலீஸார் விசாரணை நடத்தினர். இதையடுத்து பிஷ்னோயின் கூட்டாளிகள் சந்தோஷ் ஜாதவ், சிதேஷ் காம்ளே ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கிலும் பிஷ்னோய் கும்பலுக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதற்கு பிஷ்னோய் கூட்டாளி, விக்ரம் பிரார் மூளையாக செயல்பட்டதும் அவருடன் சிதேஷ் காம்ளே தொடர்பில் இருந்ததும் தெரியவந்தது.
காம்ளேவிடம் போலீஸார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் கிடைத்தது. அவர்கள் பல பிரபலங்களை மிரட்டிப் பணம் பறிக்க முயன்றுள்ளனர். அந்த லிஸ்டில் இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹரும் இருந்துள்ளார். அவரை மிரட்டி ரூ.5 கோடி பறிக்க இந்தக் கும்பல் திட்டமிட்டது தெரிய வந்தது.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "விளம்பரத்திற்காகவும், தங்களை பெரிய ஆளாகக் காட்டிக்கொள்ளவும் இதுபோன்ற வாக்குமூலங்கள் கொடுக்கப்படலாம். பெரிய கொலை வழக்குகளில் தங்களின் பெயரும் வர வேண்டும் என இதுபோன்ற ரவுடிகள் விரும்புவார்கள். அதனால் இதன் நம்பகத்தன்மை குறித்து மேலும் விசாரித்து வருகிறோம் " என்றார்.