
மு.மாறன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி வரும் ‘கண்ணை நம்பாதே’ திரைப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகியுள்ளது. அடுத்தடுத்த பகீர் திருப்பங்கள் நிறைந்த இந்த ட்ரைலர் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் என அரசியலில் அடுத்தடுத்த பரிமாணங்களை எடுத்தாலும், சினிமாவிலும் அழுத்தமான முத்திரையை பதிக்கும் முயற்சியில் உள்ளார் உதயநிதி ஸ்டாலின். கடந்த ஆண்டு மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘கலகத் தலைவன்’ வெளியானது. இதனையடுத்து அவரின் நடிப்பில் ‘கண்ணை நம்பாதே’ திரைப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்தை ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தை இயக்கிய மு.மாறன் இயக்குகிறார்.
இப்படத்தில் பிரசன்னா, ஸ்ரீகாந்த், ஆத்மிகா, சதீஷ், பூமிகா சாவ்லா, வசுந்தரா உட்பட பலர் நடித்துள்ளனர். சித்துக்குமார் இசை அமைத்துள்ள இந்தப் படத்துக்கு ஜலந்தர் வாசன் ஒளிப்பதிவு செய்துள்ளார். லிப்பி சினி கிராப்ட்ஸ் சார்பில் வி.என்.ரஞ்சித்குமார் தயாரிக்கிறார். க்ரைம் த்ரில்லர் வகை திரைப்படமான ‘கண்ணை நம்பாதே’ படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. அட்டகாசமான த்ரில்லராக உள்ள இந்த ட்ரைலர் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த திரைப்படம் வரும் மார்ச் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.