ஆண்ட்ரியா நடிக்கும் ‘அனல் மேலே பனித்துளி’ படத்தின் மூன்றாவது பாடலின் புரமோவை திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி நாளை வெளியிடவுள்ளார்.
இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பில் ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள ‘அனல் மேலே பனித்துளி’ திரைப்படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் இந்த மாதம் 18-ம் தேதி வெளியாக உள்ளது. தனது கிராஸ் ரூட் நிறுவனம் மூலமாக இளம் இயக்குநர்களை வெற்றிமாறன் அறிமுகம் செய்து வருகிறார்.
அந்த வகையில் ஜெய்சர் ஆனந்த் என்ற அறிமுக இயக்குநர் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தை வெற்றி மாறன் தயாரித்துள்ளார். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்தப்படத்தின் ‘எது நான் எங்கே’ என்ற மூன்றாவது பாடலின் புரமோ நாளை காலை 11 மணிக்கு வெளியாக உள்ளது. இதை திமுக துணைப்பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி வெளியிட உள்ளார் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.