``ஆர்ஆர்ஆர் கதாசிரியர் கே.விஜயேந்திர பிரசாத், பத்ம விபூஷண் விருதுக்கு தகுதியானவர்'' என்று நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.
ஆர்ஆர்ஆர் படத்தை சமீபத்தில் பார்த்துள்ள நடிகை கங்கனா, ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண், இயக்குநர் ராஜமவுலி உள்பட படக்குழுவை பாராட்டியுள்ளார். இதன் கதாசிரியரும் ராஜமவுலியின் தந்தையுமான விஜயேந்திர பிரசாத்துக்கு பத்ம விபூஷண் விருது வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது:
இந்தப் படத்துக்கு விளம்பரம் தேவையில்லை. அனைத்து சாதனைகளையும் இந்தப் படம் முறியடித்து வருகிறது. தேசபக்தி மற்றும் ஒற்றுமையை பேசும் படம் இது. கலாச்சாரத்தையும் கலையையும் ஊக்குவிக்கிறது. இரண்டு மாவீரர்களின் கதையை சொல்லும் இந்தப் படத்தைப் பார்த்த பின், இன்னும் அறியப்படாத, பேசப்படாத சுதந்திரப் போராட்ட ஹீரோக்கள் எத்தனையோ பேர் இருப்பார்கள் என்றே தோன்றுகிறது.
இந்தப் படத்தின் கதாசிரியர், விஜயேந்திர பிரசாத், பல மறக்க முடியாத கதைகளைத் தந்துள்ளார். 80 வயதிலும் பிசியான எழுத்தாளராக இருக்கிறார். 15 நாட்களில் ஒரு படத்தின் கதையை எழுதி முடித்துவிடுகிறார். அவர் பத்ம விபூஷண் விருதுக்கு தகுதியானவர் என்று நினைக்கிறேன். இது இளைஞர்களின் தேவை. அவரை போன்ற பலர் இந்தத் துறைக்கு தேவை. இயக்குநர் ராஜமவுலி, ராஜாவை போன்றவர் என்றும் அவர் நீண்ட நாட்கள் வாழ வேண்டும்.
இவ்வாறு கங்கனா தெரிவித்துள்ளார்.